38 ஆண்டுக்கு பின் குமரியில் போட்டியிடும் திமுக
நாகர்கோவில்: நாகர்கோவில் தொகுதியாக இதுவரை இருந்து தற்போது கன்னியாகுமரி என மாற்றப்பட்ட பின்னர் திமுக அங்கு கிட்டத்தட்ட 38 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல் முறையாக போட்டியிடுகிறது.
நாகர்கோவில் தொகுதி மறுசீரமைப்பு பிறகு கன்னியாகுமரி தொகுதியாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
இத்தொகுதியில் 1951ம் ஆண்டு நடந்த முதல் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசை சேர்ந்த நேசமணி போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பின்பு தொடர்ந்து இந்த தொகுதி காங்கிரசின் கையிலேயே இருந்தது.
1967ம் ஆண்டு காங்கிரசை எதிர்த்து திமுக ஆதரவுடன் சுதந்திரா கட்சியை சேர்ந்த டாக்டர் மத்தியாஸ் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
அதன்பின்பு 1971ம் ஆண்டு நடந்த பாராளுமன்ர தேர்தலில் திமுக முதன்முதலாக தேர்தலில் போட்டியிட்டது.
நாகர்கோவில் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக காமராஜர் போட்டியிட்டார். அவரை எதிர்த்து திமுக வேட்பாளராக எம்சி பாலன் நியமிக்கப்பட்டார். இந்த தேர்தலில் எம்சி பாலன் தோல்வியை தழுவினார். காமராஜர் 58.37 சதவீத வாக்குகள் பெற்று மகத்தான வெற்றி பெற்றார்.
1971ம் ஆண்டுக்கு பின்பு நடந்த அனைத்து பாராளுமன்ற தேர்தகளிலும் இந்த தொகுதியில் திமுக போட்டியிடவில்லை. மாறாக இத்தொகுதி திமுகவின் கூட்டணி கட்சிகளுக்கு ஓதுக்கப்பட்டது. காங்கிரசும் தொடர்ந்து போட்டியிட்டு இத்தொகுதியை தனது கோட்டையாக வைத்து கொண்டது.
1999ம் ஆண்டு நடந்த தேர்தலில் பாரதிய ஜானதா வேட்பாளர் பொன்ராதாகிருஷ்ணன் போட்டியிட்டார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் டென்னிஸ் களம் இறங்கினார். இந்த தேர்தலில் முதன்முதலாக காங்கிரஸ் தோல்வியை சந்தித்தது. பொன்ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்று மந்திரியாகவும் ஆனார்.
அடுத்து 2004ம் ஆண்டு நடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றிருநத கம்யூ கட்சிக்கு ஓதுக்கப்பட்டது. திமுக கூடடணியில் காங்கிரஸ் இருந்த பிறகும் இந்த தொகுதி கம்யூ கட்சிக்கு ஓதுக்கப்பட்டது.
இதனால் காங்கிரசார் அதிருப்தி அடைந்தாலும் கூட்டணி தர்மம் காரணமாக கம்யூனிஸ்டுகளுக்கு ஆதரவு தெரிவித்து அதன் வேட்பாளர் பெல்லர்மினை ஜெயிக்க வைத்தனர்.
இந்த முறை கன்னியாகுமரி தொகுதியை காங்கிரசுக்கு ஓதுக்க வேண்டும் என்று தேர்தல் அறிவிப்பு வெளியான நாளில் இருந்தே காங்கிரசார் போராட்டம் நடத்தினார்கள்.
இருந்தாலும் திமுக கூட்டணியில் இத்தொகுதியை காங்கிரசுக்கு ஓதுக்காமல் திமுகே களம் இறங்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம் 38 ஆண்டுகளுக்கு பிறகு திமுக இத்தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறது.