தமிழீழம் மலர்ந்தால் பெரும் மகிழ்ச்சி-கருணாநிதி
சென்னை: ஜனநாயகரீதியில் இலங்கை தமிழ் மக்கள் வாக்களித்து தமிழீழம் மலர்ந்தால் என்னைவிட அதிக மகிழ்ச்சியடைபவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.
தேர்தலையொட்டி அண்ணா அறிவாலயத்தில் இன்று கருணாநிதி தலைமையில் திமுக சொற்பொழிவாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பிரச்சார வியூகத்தை கட்சியினருக்கு விளக்கிய கருணாநிதி பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
இந்தத் தேர்தலில் எதிர்கட்சியினர் மக்கள் பிரச்சனைகளை முன்வைக்காமல் அவர்களை திசை திருப்பும் நோக்கத்தில் தமிழீழத்தை திமுக ஆதரவிக்கவில்லை என்ற மாய்மாலத்தை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
திமுகவும், காங்கிரசும் ஈழத் தமிழர்களுக்கு எதிரானவர்கள் என்று சாயம் பூசு நினைக்கிறார்கள். அவர்களுடைய எண்ணம் ஒருபோதும் ஈடேறாது. இந்தக் கருத்துக்களை மக்களிடம் எடுத்துச் சொல்லி பிரச்சாரம் செய்ய வேண்டும் என்றும், இது தவிர்த்து மற்ற பிரச்சனைகள் குறித்தும் அண்ணா வகுத்து தந்த கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என்றும் சொற்பொழிவாளர்களிடம் வலியுறுத்தப்பட்டது.
ஜனநாயகரீதியில் இலங்கை தமிழ் மக்கள் வாக்களித்து தமிழீழம் மலர்ந்தால் என்னைவிட அதிக மகிழ்ச்சியடைபவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது. இதனை இன்று நேற்றல்ல பல ஆண்டுகளாகவே நான் வலியுறுத்தி வந்திருக்கிறேன்.
இவற்றை எல்லாம் மக்களிடம் எடுத்துரைத்து பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என்று திமுக சொற்பொழிவாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார் கருணாநிதி.
நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ராசா, அமைச்சர்கள் அன்பழகன், மு.க.ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், பரிதிஇளம் வழுதி, எம்பிக்கள் தயாநிதிமாறன், கனிமொழி, திருச்சி சிவா மற்றும் திமுகவின் தலைமைக்கழக பேச்சாளர்கள் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications