தென்காசி சீட்-காங்கிரசை சுற்றும் கிருஷ்ணசாமி!
தென்காசி: தென்காசி தொகுதியை தனது புதிய தமிழகம் கட்சிக்கு தருமாறு காங்கிரஸ் பொதுச் செயலாளர் குலாம் நபி ஆசாத்திடம் கேட்க அக்கட்சியின் தலைவர் டாக்டர். கிருஷ்ணசாமி தீவிரமாக முயற்சித்து வருகிறார்.
புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமிக்கு தென்காசி தொகுதியில் கணிசமான ஓட்டு வங்கி இருக்கிறது. கடந்த 1998ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தென்காசி தொகுதியில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் ஓட்டுக்கள் வாங்கினார். 2004ல் நடந்த தேர்தலில் 1 லட்சத்து 86 ஆயிரம் ஓட்டுகள் பெற்று குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
அதிக அளவில் ஓட்டுக்களை பெற்ற போதிலும் ஒரு முறை கூட வெற்றிபெற முடியவில்லை. இதையடுத்து இம்முறை அதிமுக கூட்டணியில் சேர்ந்து தனி தொகுதியான தென்காசி வாங்கிவிடலாம் என எண்ணியிருந்தார்.
ஆனால், இவரது கோரிக்கையை கண்டுகொள்ளாத அதிமுக, தென்காசியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கியது. இதையடுத்து கிருஷ்ணசாமியின் அதிமுக கூட்டணி கனவு முறிந்தது.
தற்போது அவர் காங்கிரஸ் பொதுச் செயலாளரும், தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பார்வையாளருமான குலாம் நபி ஆசாத்தை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட முடிவு செய்துள்ளார். இதை தொடர்ந்து சென்னையில் அவர் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு சென்று அவரை சந்திக்க முயற்சித்து வருகிறார்.
தென்காசி தொகுதிக்கு இதுவரை காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.












Click it and Unblock the Notifications