சிறைக்குச் சென்ற தியாகத்திற்காக காடுவெட்டிக்குக் குருவுக்குக் கிடைத்த பரிசு
வன்னியர் சங்கத் தலைவராக இருந்து வருகிறார் காடுவெட்டி குரு. அத்தோடு பாமகவின் பொருளாளரும் இவரே.
பாமகவின் தீவிரமான தலைவர்களில் குருவும் ஒருவர். அஞ்சா நெஞ்சன் என்று ராமதாஸால் வர்ணிக்கப்படுபவர்.
பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் குருவின் செல்வாக்கு அனைவரும் அறிந்ததே.
2001ம் ஆண்டு ஆண்டிமடம் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆனார். அதற்கடுத்த தேர்தலில் அவர் போட்டியிடவில்லை.
தற்போது ஆண்டிமடம் தொகுதியின் எம்.எல்.ஏவாக இருப்பவர் திமுகவைச் சேர்ந்த சிவசங்கர்.
கடந்த ஆண்டு காடுவெட்டி குரு பேசிய பேச்சுதான் திமுகவுக்கும், பாமகவுக்குமான உறவை முறித்துப் போட முக்கிய காரணமாக அமைந்தது.
சிவசங்கரையும், முதல்வர் கருணாநிதி, ஆற்காடு வீராசாமி ஆகியோரையும் காடுவெட்டி குரு கடுமையான வார்த்தைகளால் அர்ச்சித்துப் பேசியது திமுக தரப்பை கொந்தளிக்க வைத்தது.
இதையடுத்து குரு கைது செய்யப்பட்டார். பின்னர் தேசிய பாதுகாப்புச் சட்டமும் பாய்ந்தது. ஆனால் சில மாதங்களில் திமுக, பாமக தரப்புக்கிடையே சுமூக நிலை உருவானது. இதையடுத்து தேசிய பாதுகாப்புச் சட்டம் வாபஸ் பெறப்பட்டது.
இருப்பினும் குரு மனதில் பதிந்த வடுவை, டாக்டர் ராமதாஸால் கூட ஆற வைக்க முடியவில்லை. அந்த அளவுக்கு காயப்பட்டுப் போயிருந்தார் குரு. திமுகவுடன் கூட்டணி வைக்கவே கூடாது என்று திட்டவட்டமாக வலியுறுத்தியவர்களில் குருவும் ஒருவர்.
இதன் காரணமாகவே திமுக கூட்டணி வேண்டாம் என்ற முடிவுக்கு வந்தார் டாக்டர் ராமதாஸ்.
தற்போது திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிடுகிறார் காடுவெட்டி குரு. அங்கு அவர் எதிர்த்துப் போட்டியிடப் போவது திமுக வேட்பாளரை. இதனால் திருவண்ணாமலை தேர்தல் களம் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.