சேமிக்கும் பழக்கமே நாட்டைக் காக்கும்-அப்துல் கலாம்
துபையில் உள்ள இந்திய தூதரகத்தில் நடந்த 'இந்தியன் மேட்டர்ஸ்' என்ற பத்திரிகைத் துவக்க விழாவில் நேற்று பங்கேற்ற கலாம் மேலும் கூறியதாவது:
விவசாயத் துறையில் புதுமைகளைப் புகுத்த வேண்டியதைப் பற்றி சிந்திக்கும் காலம் வந்துவிட்டது. விவசாயத் துறை, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள்தான் இன்றைய சூழலில் நாட்டின் மொத்த உற்பத்தியில் பெரும்பங்கு ஆற்ற முடியும் என நம்புகிறேன்.
இந்தியாவின் பொருளாதாரம் குடும்பங்களை அடிப்படையாகக் கொண்டது. சேமிக்கும் பழக்கம்தான் குடும்பங்களின் பெரும் சொத்து. இப்போதும் இந்த சேமிப்புப் பழக்கமே இந்தியப் பொருளாதாரத்தை வீழ்ச்சியிலிருந்து காத்துக் கொண்டிருக்கிறது.
பொருளாதாரத்தில் உலகமயமாக்கல் தொடர்ந்தாலும், இந்த சேமிப்பு பழக்கம் நம்மை விட்டு போகாமல் இருப்பதுதான் இந்தியாவைக் காப்பாற்றும்.
இந்தியா தனது தனித்தன்மையுடன் பொருளாதாரத்தைக் காத்தால், வரும் 2012-க்குள் ஆண்டுக்கு 200 பில்லியன் டாலர் வர்த்தகத்தை செய்ய முடியும்.
இன்னொரு முக்கியமான விஷயம், வருகிற 2030-க்குள் இந்தியா, சக்தித் துறையில் தன்னிறைவை அடைந்துவிடும். சோலார் மற்றும் பயோப்யூயல்ஸ் மூலம் மாற்று எரிசக்தி நிறைய கிடைக்கும் வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்றார்.