வேலூர்: பேத்தியை கொன்று பாட்டி-மகள் தற்கொலை
வேலூர் : வேலூர் மாவட்டம், நாட்ராம்பள்ளியில் பெண் தனது குழந்தையை கொன்றுவிட்டு, தனது தாயுடன் தற்கொலை செய்து கொண்டார்.
வேலூர் மாவட்டம், நாட்ராம்பள்ளி அண்ணா நகரைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். சுண்ணாம்பு வியாபாரி. இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர்.
இவரது முதல் மனைவி விஜயா (48). இவரது மகள் தனலட்சுமி (24). ஊத்தங்கரையில் இவரை திருமணம் செய்து கொடுத்தனர். தனலட்சுமிக்கு 5 மாத பெண் கைக்குழந்தை இருந்தது.
திருமணத்தின் போது தனலட்சுமிக்கு போட்ட நகைகளை வாங்கி தாய் வீட்டில் அடகு வைத்து விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து தனலட்சுமிக்கு மாமியார் வீட்டில் அடிக்கடி பிரச்சினை எழுந்துள்ளது.
இந்த நிலையில், கடந்த 27ம் தேதி முதல் மனைவியின் வீட்டுக்கு வந்த ராமச்சந்திரனிடம், அடகு நகைகளை மீட்டு தருமாறு விஜயாவும், தனலட்சுமியும் கேட்டுள்ளனர்.
இதனால் குடும்பத்தில் சண்டை ஏற்பட ராமச்சந்திரன் இரண்டாவது மனைவியின் வீட்டுக்கு சென்று தங்கியுள்ளார். இந்த நிலையில், விஜயாவின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தினர் ராமச்சந்திரனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்ததை அடுத்து, கதவை உடைத்து திறந்து உள்ளே சென்றனர். அப்போது விஜயாவும், அவரது மகளும் தூக்கில் பிணமாக தொங்கினர். தனலட்சுமியின் 5 மாத பெண் குழந்தை கீழே தரையில் இறந்து கிடந்தது.
இதையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தாயும், மகளும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு அந்த குழந்தையை அவர்கள் கொன்று இருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். இது குறித்து நாட்றாம்பள்ளி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.