சிக்பள்ளபூரில் மொய்லி, உத்தரகன்னடாவில் ஆல்வா போட்டி
பெங்களூர்: கர்நாடக மாநிலம் சிக்பள்ளபூரில் முன்னாள் முதல்வர் வீரப்ப மொய்லியும், உத்தர கன்னடா தொகுதியில் மார்க்ரெட் ஆல்வாவும் போட்டியிடுவார்கள் என காங்கிரஸ் அறிவித்துள்ளது.
கர்நாடகாவில் இருக்கும் 28 தொகுதிகளுக்கு நாடாளுமன்ற தேர்தல் இரண்டு கட்டமாக வரும் 16 மற்றும் 23ம் தேதிகளில் நடக்கிறது. இதில் போட்டியிடும் 22 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை இரண்டு நாட்களுக்கு காங்கிரஸ் வெளியிட்டது.
இந்நிலையில் நேற்று 5 வேட்பாளர்களை கொண்ட இரண்டாவது பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் தலைவருமான வீரப்ப மொய்லி சிக்பள்ளபூர் தொகுதியில் இருந்து போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரகன்னடா தொகுதியில் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு பின்னர் மீண்டும் சேர்த்துக்கொள்ளப்பட்டவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மார்க்கரெட் ஆல்வா போட்டியிடுகிறார்.
பெங்களூர் தெற்கு தொகுதியில் கிருஷ்ணபைரே கவுடா, சிக்மாக்ளூர் தொகுதியில் ஜெயபிரகாஷ் ஹெக்டே மற்றும் சாம்ராஜ்நகரில் துருவ நாராயண் ஆகியோர் போட்டியிடுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 27 தொகுதிகளுக்கு காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுவிட்டனர். மாண்டியா தொகுதிக்கு மட்டும் வேட்பாளர் அறிவிக்கப்பட வேண்டியுள்ளது. இங்கு அம்பரிஸ் போட்டியிட வாய்ப்பு கேட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடகவில் இதுவரை பாஜக 24, மதசார்பற்ற ஜனதா தளம் 18 தொகுதிகளில் வேட்பாளர்களை அறிவித்துள்ளன.