நெல்லை தொகுதி கோரி திமுகவினர் போர்க்கொடி
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் இருக்கும் இரண்டு நாடாளுமன்ற தொகுதிகளை திமுக தலைமையகம் காங்கிரசுக்கு ஒதுக்கி இருப்பதால் கட்சியினர் சோர்வு அடைந்திருப்பதாக தெரிகிறது. இவர்கள் நெல்லை தொகுதியை கேட்டு பெறவிருப்பதாகவும் தெரிகிறது.
திமுக, காங்கிரஸ் கூட்டணியில் கன்னியாகுமரியில் சுமார் 25 ஆண்டுகளுக்கு பின்னர் திமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு கன்னியகுமரி மாவட்ட காங்கிரசார் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
கன்னியாகுமரி தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்கவில்லை என்றால் திமுகவிற்கு எதிராக போட்டி வேட்பாளர் நிறுத்தப்படுவார் என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
அதே சமயத்தில் நெல்லை மாவட்டத்தில் உள்ள தென்காசி, நெல்லை இரண்டு தொகுதிகளும் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இது நெல்லை திமுகவினர் மத்தியில் பெரும் சோர்வை ஏற்படுத்தியுள்ளதாக் தெரிகிறது.
இந்நிலையில் கன்னியகுமரியில் காங்கிரஸ் போட்டியிட விரும்புவதால் அதற்கு பதிலாக நெல்லை தங்களுக்கு கிடைக்கும் என திமுகவினர் சிலர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் நெல்லை தொகுதியை திமுக விட்டு கொடுத்ததற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகி்ன்றன. நெல்லை மாவட்ட திமுக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான கருப்பசாமி பாண்டியன் தனது மகனுக்கு சீட் கேட்டுள்ளாராம். அதேபோல் தமிழக சபாநாயாகர் இரா. ஆவுடையப்பன் தனது மகனுக்கு சீட் கேட்டு்ள்ளாராம்.
அதுபோக திமுக பல முக்கிய புள்ளிகளும் நெல்லை தொகுதியை வைத்துள்ளதால் யாருக்கும் சீட் கொடுக்க முடியாத நிர்பந்ததிற்கு திமுக தள்ளப்பட்டுள்ளதால்தான் இந்த நிலைமை என்றும், தென்காசி தொகுதியும் இதே நிலைதான் என்றும் கூறப்படுகிறது.
அதேசமயம் வேறு ஒரு கருத்தையும் திமுகவினர் மத்தியில் உலவி வருகிறது.
திமுக தென்மண்டல பொருப்பாளர் முக அழகிரிக்கும், கருப்பசாமி பாண்டியனுக்கும் மனகசப்பு உருவாகியுள்ளதால் அழகிரி நெல்லை வரும்போது பிரச்சனை எழுந்ததால் தற்போது கருப்பசாமி பாண்டியன் ஓதுக்கி வைக்க கட்சியில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதனால்தான் நெல்லை,தென்காசி ஆகிய இரு தொகுதிகளில் திமுக போட்டியிடாமல் காங்கிரஸ்கட்சிக்கு ஒதுக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.