அதிமுக: பி.எச்.பாண்டியனா? நயினார் நாகேந்திரனா?
நெல்லை: நெல்லை தொகுதியில் அதிமுக சீட் பெற முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் மற்றும் மாஜி சபாநாயகர் பி.எச்.பாண்டியன் இடையில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் உள்ள நெல்லை, தென்காசி தொகுதிகளில் தென்காசி தொகுதி அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. நெல்லை தொகுதியில் அதிமுக போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இத்தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட பிஎச் பாண்டியன், அவரது மகன் மனோஜ் பாண்டியன், முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன், பாப்புலர் முத்தையா, சுதா.பரமசிவன், எம்சி ராஜன் உள்ளிட்டோர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர்.
எப்படியும் சீட் பெற்று விடவேண்டும் என்ற நோக்கில் தங்களது ஆதரவார்களுடன் இவர்கள் அனைவரும் சென்னையில் முகாமிட்டுள்ளனர். இருப்பினும் பிஎச் பாண்டியன், நயினார் நாகேந்திரன் ஆகியோருக்கு இடையே தான் கடும் போட்டி நிலவுவதாக கூறுகிறது.
நயினார் நாகேந்திரன் கடந்த 2001ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று 5 ஆண்டுகள் அமைச்சர் பதவி வகித்தார். இதே போல் பி.எச்.பாண்டியன் சேரன்மகாதேவி தொகுதி சட்டசபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு சபாநாயகராக பதவி வகித்தவர்.
நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார். எனவே இவருக்கு கண்டிப்பாக சீட் கிடைக்கும் என அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.
இதேபோல் நயினார் ஆதரவாளர்களும் அவருக்கு கட்டாயம் சீட் கிடைத்துவிடும் என நம்புகின்றனர். தேர்தலில் யாரையும் எதிர்பார்க்காமல் எவ்வளவு பணம் வேணடுமானாலும் செலவு செய்ய கூடியவர் என்கின்றனர்.
நெல்லை நாடாளுமன்றத் தொகுதியை பொறுத்தவரை நெல்லை, பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம், ஆலங்குளம், அம்பை ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இவைகளில் நாடார் மற்றும் தாழ்த்தப்பட்ட ஓட்டுக்கள் அதிகளவில் உள்ளன.
எனவே நாடார் சமுதாயத்தை சேர்ந்த பி.எச்.பாண்டியனுக்கே சீட் கிடைக்கும் என்று அவரது ஆதரவாளர்கள் கருதுகின்றனர். எதிரும் புதிருமான இருவரில் யாருக்கு சீட் கிடைக்கும் என்பது இன்னும் ஓரிரு நாளில் தெரிந்துவிடும்.












Click it and Unblock the Notifications