அண்ணா, எம்.ஜி.ஆர். உருவாக்கிய வீட்டில் புகுந்த கருநாகங்கள் கருணாநிதியும், ஜெ.வும்: விஜயகாந்த்
சிவகங்கை: கரையான் புற்று வைக்க கருநாகம் குடியிருந்தது என்பது போல அண்ணா, எம்.ஜி.ஆர். காமராஜர் போன்ற தலைவர்கள் உருவாக்கிய வீட்டில் கலைஞரும், ஜெயலலிதாவும் குடியிருந்து வருகின்றனர் என்று கூறியுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
சிவகங்கை மாவட்டத்தி்ல் நேற்று விஜயகாந்த் பிரசாரம் செய்தார்.
நேற்று காலை 11 மணிக்கு மானாமதுரைக்கு அவர் வந்தார். அங்கு அவருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் ஊர்வலமாக கிளம்பிய விஜயகாந்த், திருப்பாச்சேத்தி, திருப்புவனம், பூவந்தி, திருமாஞ்சாலை மற்றும் சிவகங்கை ஆகிய ஊர்களில் வாக்கு சேகரித்தார்.
பிரசாரத்தின்போது விஜயகாந்த் பேசுகையில்,
தனியாக ஒரு கட்சியை தொடங்கி நடத்துவது எவ்வளவு கஷ்டம். அதிலும் யாருடனும் கூட்டணி வைக்காமல் இருப்பது எவ்வளவு கஷ்டம் என தெரியுமா?
கரையான் புற்று வைக்க கருநாகம் குடியிருந்தது என்பது போல அண்ணா, எம்.ஜி.ஆர். காமராஜர் போன்ற தலைவர்கள் உருவாக்கிய வீட்டில் கலைஞரும், ஜெயலலிதாவும் குடியிருந்து வருகின்றனர்.
என்னதான் விஜயகாந்த் கரடியாக கத்தினாலும் ஓட்டை தங்களுக்குத்தான் போடுவார்கள் என நினைக்கின்றனர். உங்களை கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன். நல்ல கட்சிகளை இந்த நாட்டுக்கு அடையாளம் காட்டுங்கள்.
பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் 40 நாட்களே உள்ளன. ஒரு நாளுக்கு ஒரு தொகுதி என்ற அடிப்படையில் நான் பிரசாரம் செய்து வருகிறேன்.
தற்போது அதையும் மாற்ற திட்டமிட்டுள்ளேன். மதியம் 3 மணியில் இருந்தே எனது சுற்றுப்பயணத்தை தொடங்க திட்டமிட்டுள்ளேன். எதிரணியில் உள்ளவர்கள் எப்படிப்பட்டவர் என்பதை மக்களுக்கு அடையாளம் காட்ட வேண்டும் என்றார்.
திருப்புவனத்தில் விஜயகாந்த் பேசுகையில், எனது கட்சி வேட்பாளரை வெற்றி பெற செய்யுங்கள். அவர் கண்டிப்பாக உங்களுக்கு நன்மை செய்வார். அவர் எதுவும் செய்யவில்லை என்றால், அவரை அடியுங்கள் என்றார்.
திருப்பத்தூரில் அவர் பேசுகையில், உண்மைகளை கூறினால் அதிகாரங்களை பயன்படுத்தி என்னை மிரட்டிப்பார்க்கின்றனர். தினமும் 20-க்கும் குறையாமல் எனக்கு மிரட்டல் வருகிறது. இதனை கண்டு நான் ஒருபோதும் அஞ்சமாட்டேன்.
பெண்களை நான் பெரிதும் மதிப்பவன். நீங்கள்தான் கட்சி. அதனை தேர்தலில் நிரூபிக்க வேண்டும். 40-க்கு 40 தொகுதியிலும் தே.மு.தி.க. வெற்றி பெற்றால் டெல்லியில் இருந்து தே.மு.தி.க. நல்லது செய்யும்.
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இதுவரை 50 லட்சம் பேருக்கும் மேலாக பதிவு செய்து வேலைக்காக காத்திருக்கின்றனர். வருடத்திற்கு 5 லட்சம் பேருக்கு வேலைதருவதாக உத்தரவாதம் கூறியிருந்தனர். ஆனால் கடந்த ஆண்டு 25 ஆயிரம் பேரே வேலைவாய்ப்பை பெற்றனர்.
நான் தனி மனிதனாக இருந்து 25 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுத்துள்ளேன். 11/2 கோடி ரூபாயில் கம்ப்யூட்டர் பயிற்சி மையம் அமைத்துக் கொடுத்திருக்கிறேன். சாதாரண மனிதனாக இருந்து இதையெல்லாம் செய்யும்போது ஆட்சிக்கு வந்தால் செய்யாமல் இருப்பேனா? என்றார்.