பாதுகாப்பு: அத்வானியுடன் ப.சிதம்பரம் ஆலோசனை
டெல்லி: பாஜக பிரதமர் வேட்பாளர் எல்.கே.அத்வானிக்கு ஏற்பட்டுள்ள பாதுகாப்பு மிரட்டல் குறித்து அவரை நேரில் சந்தித்து மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஆலோசனை நடத்தினார்.
இன்று காலை இந்த சந்திப்பு நடந்தது. தற்போது பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அளிக்கப்படும் அதே அளவிலான பாதுகாப்புதான் அத்வானிக்கும் வழங்கப்பட்டு வருகிறது. அவர் துணைப் பிரதமராக இருந்தபோது அவருக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு உயர்த்தப்பட்டது. அன்று முதலே அவருக்கு அதி உயர்ந்த பாதுகாப்பு தரப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் பிரசாரத்தின்போது அத்வானி மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரைக் கொலை செய்ய தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை சமீபத்தில் மத்திய அரசை எச்சரித்திருந்தது.
இதையடுத்து இருவருக்கும் வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில், அதி முக்கியமான 39 தலைவர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகளை மத்திய அரசு தீவிர பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. இந்தப் பின்னணியில்தான் அத்வானியை, ப.சிதம்பரம் சந்தித்துள்ளார்.
இந்த அதி முக்கிய பிரமுகர்கள் பட்டியலில் சோனியா, அத்வானி, பிரதமர் மன்மோகன் சிங் தவிர ராகுல் காந்தி, நரேந்திர மோடி, ராஜ்நாத் சிங், மாயாவதி, ஜெயலலிதா, சந்திரபாபு நாயுடு, உமர் அமப்துல்லா, முலாயம் சிங் யாதவ் ஆகியோரும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications