குழப்பத்தில் தமிழக-கேரள எல்லை பகுதி வாக்காளர்கள்
கோவை: தமிழக, கேரள எல்லைப் பகுதியில் வசிக்கும் கேரள வாக்காளர்கள் தாங்கள் எங்கு போய் ஓட்டுப் போடுவது என்பது தெளிவாகத் தெரியாமல் குழப்பத்தில் மூழ்கியுள்ளனர்.
கோவை மாவட்டத்தில் கோவை, பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் உள்ள வாக்காளர்கள் பட்டியலை சரிபார்க்கும் பணி நடந்து வருகிறது.
இந்த நிலையில் தமிழக- கேரள எல்லையோர கிராமங்களில் வசிக்கும் கேரளாவை சேர்ந்தவர்களில் சிலருக்கு இருமாநில வாக்காளர் பட்டியலிலும் பெயர்கள் இடம் பெற்றுள்ளதாக புகார்கள் வந்துள்ளன.
தற்போது கேரள மாநிலத்தின் வாக்காளர் சரிபார்ப்பு பணி கோவை அதிகாரிகளுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தி இருக்கிறது. அதுவும் வாக்காளர் பட்டியல் மலையாள மொழியில் இருப்பதால் மலையாளம் தெரிந்த ஊழியர்களின் உதவி தேவைப்படுகிறது.
கோவை மாவட்டத்தில் வாளையார், ஆனைகட்டி, பொள்ளாச்சி அருகே மீனாட்சிபுரம், வால்பாறை பக்கம் உள்ள மழுக்குப்பாறை ஆகிய பகுதிகளில் வசிப்பவர்களில் பலர் கேரள வாக்காளர் பட்டியலிலும், தமிழக வாக்காளர் பட்டியலிலும் இடம் பெற்றுள்ளனர்.
கடந்த தேர்தலின்போது இதேபோன்று புகார் வந்தபோது இந்த குழப்பத்தை போக்க நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. ஆனால் அப்போது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. காரணம் அப்போது 2 மாநிலங்களிலும் ஒரே நேரத்தில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
ஆனால் இந்த தேர்தலில் கேரளாவில் வருகிற 16-ம் தேதியும், தமிழ்நாட்டில் மே மாதம் 13-ம் தேதியும் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.
எனவே 2 மாநிலங்களின் பட்டியலிலும் இடம் பெற்றுள்ள ஒரே வாக்காளர் 2 இடங்களிலும் ஓட்டு போட வாய்ப்பு உருவாகி உள்ளது.
இந்தப் பின்னணியில் கேரளாவைச் சேர்ந்த வாக்காளர்கள் மத்தியில் எங்கு ஓட்டு போடுவது? என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இதை சரி செய்ய கோவை மாவட்ட எல்லையோர கிராமங்களின் வாக்காளர் பட்டியலோடு ஒப்பிட்டு சரிபார்க்கும் பணியில் கோவை, பொள்ளாச்சி கோட்டாட்சியர்கள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர்.