குண்டு புரளி: சேலத்தில் நின்ற சென்னை ரயில்
சேலம்: தீவிரவாதிகள் வெடிகுண்டுகளுடன் வருவதாக வந்த தகவலைத் தொடர்ந்து மங்களூர் - சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் சேலத்தில் நிறுத்தப்பட்டது. ஆனால் அது வதந்தி என்று பின்னர் தெரிய வந்தது.
சேலம் ரயில் நிலையத்திற்கு இன்று காலை 9 மணியளவில் ஒரு போன் அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், சில தீவிரவாதிகள், மங்களூர் - சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிகுண்டுகளுடன் வருகிறார்கள் எனக் கூறியுள்ளார்.
இதையடுத்து போலீஸாருக்குத் தகவல் போனது. போலீஸார் ரயிலை சேலத்தில் நிறுத்தும்படி உத்தரவிட்டனர். அதன்படி ரயில் சேலம் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.
பின்னர் போலீஸார் பெட்டி பெட்டியாக ஏறி சோதனை போட்டனர். மோப்ப நாயும் சோதனையில் ஈடுபடுத்தப்பட்டது.
இருப்பினும் வெடிகுண்டுகளுடன் யாரும் சிக்கவில்லை. வெடிகுண்டுகள் இருப்பதாகவும் தெரியவில்லை. இதையடுத்து அது புரளி எனத் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து ரயில் மீண்டும் தனது பயணத்தைத் தொடர்ந்தது.
போன் செய்தது யார் என்று போலீஸார் விசாரணையை முடுக்கி விட்டனர். அதில் உள்ளூர் பூத் ஒன்றிலிருந்து போன் பண்ணப்பட்டது தெரிய வந்தது.
இதற்கிடையே, போலீஸார் ரயிலை சோதனை போட்டுக் கொண்டிருந்தபோது ஒரு போலீஸ்காரர் வைத்திருந்த பிஸ்டர் திடீரென சுட்டது. இதனால் ரயிலில் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் எதிர்பாராதவிதமாக துப்பாக்கி சுட்டு விட்டது தெரிய வந்தது. அதிர்ஷ்டவசமாக யாரும் இதில் காயமடையவில்லை.