அழகிரி: வந்தார்.. ஆனால் பங்கேற்கவில்லை!
சென்னை: லோக்சபா தேர்தலில் டிக்கெட் கேட்டு விண்ணப்பித்துள்ள திமுகவினருக்கான நேர்காணல் அண்ணா அறிவாலயத்தில் நடந்தபோது நேர்காணல் குழுவினருடன் மு.க.அழகிரியும் இருந்தார். ஆனால், மதுரை தொகுதி குறித்து பேச்சு வந்தபோது அவர் நேர்காணலில் பங்கேற்கவில்லை.
கயல்விழியும்...
மேலும் அழகிரியின் மகள் கயல்விழியும் அண்ணா அறிவாலயம் வந்திருந்தார். ஆனால், அவரும் நேர்காணலில் பங்கேற்கவில்லை. இதன்மூலம் மதுரை வேட்பாளர் யார் என்பதில் சஸ்பென்ஸை திமுக நீடித்து வருகிறது.
திமுக போட்டியிடும் 21 தொகுதிகளில் போட்டியிட விரும்பி மனு செய்துள்ளவர்களுக்கு நேற்று நேர்காணல் தொடங்கியது. முதல்வர் கருணாநிதி தலைமை தாங்க, அமைச்சர் அன்பழகன் முன்னிலையில் நேர்காணல் நடக்கிறது.
தேர்தல் பணிக் குழுவை சேர்ந்த அமைச்சர்கள் மு.க.ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி, வீரபாண்டி ஆறுமுகம் ஆகியோர் உடன் இருந்தனர். இந்தக் குழு ஒரு மேஜை முன் அமர்ந்திருக்க எதிர் பக்கமாக நேர்காணலுக்கு வந்த வேட்பாளர்கள் அமர்ந்தனர். அவர்களிடம் இந்தக் குழு இன்டர்வியூ நடத்தியது.
தனியே அமர்ந்த அழகிரி:
அப்போது மேஜைக்கு 3 அடி தள்ளி தனியாக ஒரு நாற்காலி போடப்பட்டு அதில் அழகிரியும் அமர்ந்திருந்தார். அவர் யாரிடமும் நேர்காணலும் நடத்தவில்லை. நேர்காணலிலும் பங்கேற்கவில்லை.
(ஆனால், அவர் நேர்காணலுக்கு வரவில்லை என்றது திமுக தரப்பு.. இதைத்தான் நமது செய்தியாளர் அழகிரி வரவில்லை என்று போட்டுவிட்டார்-ஆசிரியர்).
நேற்று கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, ஸ்ரீபெரும்புதூர் தொகுதிகளுக்கு நேர்காணல் நடைபெற்றது. மற்ற தொகுதிகளுக்கு மனு செய்தவர்களை அழைத்து இந்தக் குழு இன்டர்வியூ நடத்தியது.
மதுரை நிர்வாகிகளுக்கு அட்வைஸ்:
ஆனால், மதுரை தொகுதி நேர்காணல் வந்தபோது விருப்ப மனு தாக்கல் செய்த யாரும் அழைக்கப்படவில்லை. காரணம், அங்கு மு.க.அழகிரியே போட்டியிட வேண்டும் என நூற்றுக்கணக்கானோர் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
மதுரை மாவட்ட நிர்வாகிகளை மொத்தமாக அழைத்த முதல்வர் கருணாநிதி சில அறிவுரைகளை மட்டும் கூறிவிட்டு அனுப்பிவிட்டார்.
நான் போட்டியா?..யார் சொன்னது?:
இதன் பின்னர் அழகிரியை நிருபர்கள் சந்தித்து, முதல் முறையாக தேர்தலில் போட்டியிடுகிறீர்கள்.. என்று ஆரம்பித்த உடனேயே, நான் போட்டியிடுவதாக யார் சொன்னது. கட்சி அறிவித்தால் கேளுங்கள் என்றார் அழகிரி.
கயல்விழி என் பின்னால் நிற்கிறார்...:
உங்கள் மகள் கயல்விழி எங்கே நிற்கிறார் (எங்கே போட்டியிடுகிறார்) என்று கேட்டதற்கு, என் மகள் என் பி்ன்னால் நிற்கிறார் என்று சிரித்தவாரே கூறிய அழகிரி அவர் எந்தத் தொகுதிக்கும் விண்ணப்பிக்கவில்லை. அவருக்காக சிலர் விண்ணப்பித்திருக்கலாம், அதுபற்றி எனக்குத் தெரியாது என்றார்.