இன்று மதுரை வருகிறார் மாயாவதி - வேட்பாளர்களை அறிமுகம் செய்து பிரசாரம்
மதுரை: பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரும், உ.பி. முதல்வருமான மாயாவதி இன்று மதுரையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பிரசாரம் செய்கிறார். தனது கட்சியின் சார்பில் தமிழகத்தில் போட்டியிடும் 39 வேட்பாளர்களையும் அவர் அறிமுகம் செய்து வைக்கிறார்.
தமிழகத்தில் பகுஜன் சமாஜ் கட்சி யாருடனும் சேராமல் தனித்துப் போட்டியிடுகிறது. 39 தொகுதிகளிலும் அக்கட்சி போட்டியிடுகிறது.
இன்று மதுரையில் மாயாவதி தனது பிரசாரத்தைத் தொடங்குகிறார்.
இதுகுறித்து பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சுரேஷ்மானே மதுரையில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தமிழக வாக்காளர்களில் 25 சதவீதம் பேர் ஆதிதிராவிடர்கள். இவர்களது வாக்குகளுடன் அனைத்து தரப்பினரின் வாக்குகளையும் பெறுவோம். பல்வேறு சமுதாயத்தை சேர்ந்த வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். 6 சதவீதத்துக்கு மேல் வாக்குகள் பெறுவோம்.
மதுரை மேலமாசி வீதியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கட்சித் தலைவர் மாயாவதி கலந்து கொள்கிறார். அப்போது 39 தொகுதி வேட்பாளர்களையும் அறிமுகப்படுத்தி, பிரசாரம் செய்வார் என்றார்.
பேட்டியின்போது மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகையும் உடன் இருந்தார்.