For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முன்னாள் போலீஸார் சங்கம் வைக்கலாம்-நீதிமன்றம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: ஓய்வு பெற்ற போலீஸார் சங்கம் வைப்பதற்கு சட்டத்தில் எந்தத் தடையும் இல்லை என்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ளது.

உயர்நீதிமன்றத்தில் நடந்த கலவரம் தொடர்பாக முன்னாள் போலீஸார் சங்கம் வைத்து போராட்டம் நடத்தி வரும் நிலையில் இந்த தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

சென்னையை சேர்ந்த வக்கீல் சந்துரு பொதுநலன் கருதி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார்.

அதில், தமிழ்நாடு போலீஸ் சட்டம், தமிழ்நாடு போலீஸ் நடத்தை விதி போன்ற போலீஸ் சட்டங்கள் உள்ளன. ஆனால் இந்த சட்டத்திற்கு எதிராக ஓய்வு பெற்ற போலீஸ் உதவி கமிஷனர் அந்தோணிசாமி காவலர் நலசங்கம் என்ற அமைப்பை தொடங்கியுள்ளார்.

வக்கீல்களுக்கு எதிராக ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகள், போலீஸ் குடும்பத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். போலீஸ் அதிகாரிகளின் தூண்டுதலின்பேரில் இந்த போராட்டம் நடத்தப்படுகிறது.

உரிமை கட்டுப்பாட்டு சட்டத்தின்கீழ் போலீசார் சங்கம் அமைத்துக்கொள்ள உரிமை கிடையாது.

ஆகவே, காவலர் நலசங்கத்தில் உள்ள ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யவேண்டும். இந்த சங்கம் சட்டவிரோதமானது என்று அறிவிக்க வேண்டும். இந்த சங்கத்தின் சார்பில் வரும் 16-ந் தேதி சென்னையில் ஊர்வலம் நடத்தப்பட உள்ளது.

அனுமதி வழங்கினாலும், வழங்காவிட்டாலும் ஊர்வலம் நடத்துவோம் என்று சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே, இந்த சங்க நிர்வாகிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த ஊர்வலத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி எச்.எல்.கோகலே, நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், சந்துருவின் கோரிக்கையை நிராகரித்தனர். நீதிபதிகள் அளித்த உத்தரவில், தமிழ்நாடு போலீஸ் சட்டங்கள், ஓய்வு பெற்ற போலீஸ்காரர்களுக்கு பொருந்தாது.

ஓய்வு பெற்ற போலீசார் சங்கம் அமைக்க இந்த சட்டத்தில் தடை விதிக்கவில்லை. ஆகவே, இந்த சங்கத்தை சட்டவிரோதமானது என்று அறிவிக்கவோ, அதன் நடவடிக்கைகளுக்கு தடைவிதிக்கவோ முடியாது.

16ம் தேதி நடக்க இருக்கும் ஊர்வலத்துக்கு அரசு தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த மனுவை விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை.

இந்த வழக்கை வாபஸ் பெறுவதாக மனுதாரர் தரப்பு வக்கீல் தெரிவித்தார். வாபஸ் பெறுவதை ஏற்று வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X