அன்புமணி தலைமையில் ஜெ.வை சந்தித்து ஆசி பெற்ற பாமக வேட்பாளர்கள்
சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் லோக்சபா தேர்தலில் போட்டியிடும் பாமக வேட்பாளர்கள் ஏழு பேரும், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்து ஆசி பெற்றனர்.
அதிமுக கூட்டணியில் பாமக சார்பில் ஸ்ரீபெரும்புதூரில் ஏ.கே.மூர்த்தி, திருவண்ணாமலையில் ஜெ.குரு, தர்மபுரியில் டாக்டர் செந்தில்குமார், சிதம்பரம் (தனி) தொகுதியில் பொன்னுசாமி, கள்ளக்குறிச்சியில் தன்ராஜ், அரக்கோணத்தில் வேலு, புதுச்சேரியில் பேராசிரியர் மு.ராமதாஸ் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
இவர்கள் அனைவரும் டாக்டர் அன்புமணி ராமதாஸ், பாமக தலைவர் ஜி.கே.மணி, ஆகியோரது தலைமையில் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்துக்கு நேற்று மாலை சென்றனர்.
அனைத்து வேட்பாளர்களும் ஜெயலலிதாவிடம் ஆசி பெற்றனர்.
பின்னர் வேட்பாளர்களோடு வெளியே வந்த அன்புமணி செய்தியாளர்களிடம் பேசுகையில், கூட்டணியின் தலைவரும், அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவை சந்தித்து, 7 பாராளுமன்ற வேட்பாளர்களை அறிமுகம் செய்து, அவர்களின் வாழ்த்துக்களை பெற்றோம்.
எங்களின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியதுபோல வருகிற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி புதுச்சேரி உள்பட 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் நிச்சயமாக வெற்றி பெறுவோம்.
அ.தி.மு.க. கூட்டணி ஓரிருநாளில் முடிவாகிவிடும்.
தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் எப்போது என்பது விரைவில் அறிவிக்கப்படும்.
பாட்டாளி மக்கள் கட்சியை தாக்கி முதல்-அமைச்சர் கருணாநிதி தொடர்ந்து அறிக்கை வெளியிட்டு வருவது குறித்து நான் பதில் சொல்ல விரும்பவில்லை. இதற்கு மக்கள் பதில் சொல்வார்கள் என்றார்.