தமிழக மீனவர்களை விடுவிக்க போர்க்கால நடவடிக்கை-ஜெ
சென்னை: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை போர்க்கால அடிப்படையில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்திய கடல் எல்லைப்பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் 23 பேரை கடந்த 2ம் தேதி இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து அவர்களுடைய விசைப்படகுகளை பறிமுதல் செய்திருக்கின்றனர்.
கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி 3ம் தேதி முதல் ராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த வேதனையான சூழ்நிலையில் தமிழக மீனவர்களை மேலும் பாதிக்கும் விதமாக கடந்த 3ம் தேதி அன்று பாம்பன் பகுதியைச்சேர்ந்த மீனவர்கள் கச்சத் தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டபடி கடுமையாக தாக்கி கச்சத் தீவில் கொளுத்தும் வெயிலில் சுடு மணலில் வெற்று உடம்புடன் படுக்க வைத்து கொடுமைப்படுத்தி உள்ளனர்.
மேலும் மீனவர்களிடம் இருந்த மீன்பிடி சாதனங்களையும், அவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களையும் கடலில் வீசி எறிந்துள்ள கொடுமையும் நடைபெற்றிருக்கிறது.
வேதனையும், அதிர்ச்சியும் அளிக்கிறது...
இலங்கை கடற்படையினரின் தகாத செயல்களுக்கு எனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். மீனவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் எனக்கு மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது.
தமிழக மீனவர்களின் பாதுகாப்பிற்கு தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும் என்று நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.
ஆனால் மத்திய, மாநில அரசுகள் இதுவரை எந்த உறுதியான நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. அதனால் தான் இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர்.
உடனடியாக சிறைபிடிக்கப்பட்ட 23 மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்டுள்ள படகுகளையும் விடுவிப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
விரைவில் நிரந்தர தீர்வு...
தமிழக மீனவர்களின் நலனில் அக்கறை கொண்ட ஆட்சி விரைவில் மத்தியில் மலர இருக்கிறது. அப்போது தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என்பதை இத்தருணத்தில் நான் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார் ஜெயலலிதா.