பகுஜன் சமாஜுடன் ஜான் பாண்டியன் கட்சி கூட்டணி - மனைவி பிரிசில்லா
நெல்லை: பகுஜன் சமாஜ் கட்சியுடன் இணைந்து தாங்கள் 3 தொகுதிகளில் போட்டியிடுவதாக ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளரும், ஜான் பாண்டியனின் மனைவியுமான பிரிசில்லா பாண்டியன் கூறியுள்ளார்.
மதுரையில் பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியலை கட்சித் தலைவர் மாயாவதி அறிவித்தார். அதில் பிரிசில்லா பாண்டியன் ராமநாதபுரத்தில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், தாங்கள் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி வைத்து 3 தொகுதிகளில் பகுஜன் சமாஜின் யானை சின்னத்தில் போட்டியிடுவதாக பிரிசில்லா அறிவித்துள்ளார்.
மதுரைக்கு மாயாவதி வந்தபோது அவரை பிரிசில்லா பாண்டியன் சந்தித்தார். அப்போது அவரது கட்சிக்கும், பகுஜன் சமாஜ் கட்சிக்கும் தொகுதி உடன்பாடு ஏற்பட்டது.
அதன்படி, ராமநாதபுரம், நெல்லை, பெரம்பலுர் ஆகிய 3 தொகுதிகளில் தமிழக முன்னேற்ற கழகம் பகுஜன் சமாஜ் கட்சியின் ஆதரவுடன் யானை சின்னத்தில் போட்டியிடுகிறது.
ராமநாதபுரம் தொகுதி வேட்பாளராக பொது செயலாளர் பிரிசில்லா பாண்டியன் அறிவிக்கப்பட்டார்.
இது குறித்து பிரிசில்லா பாண்டியன் கூறுகையில், வருகிற 7ம் தேதி காலை 10 மணிக்கு நெல்லை ஹோட்டல் சகுந்தலா சுமங்கலி மகாலில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் நடக்கிறது.
இந்த கூட்டத்தில் நெல்லை, பெரம்பலூர், பாராளுமன்ற தொகுதிக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவர். கூட்டத்தில் தேர்தல் பிரச்சார யுக்திகள் குறித்து விவாதிக்கப்படுவதுடன் தேர்தல் பணிகுழுவும் அமைக்கப்படுகிறது.
ஏப்ரல் 8ம் தேதி முதுகுளத்தூரில் தேர்தல் பிரசாரம் துவங்குகிறேன்.
தென்மாவட்டங்களில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அங்கீகாரம் மறுக்கப்பட்டு வருகிறது. தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக எங்களை அர்பணித்து கொள்ள பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளோம் என்றார் பிரிசில்லா.