அதிமுக: சிபிஎம் சிக்கல் தீர்ந்தது-மதுரை, குமரி, கோவை ஒதுக்கீடு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மதுரை, கன்னியாகுமரி, கோவை ஆகிய 3 தொகுதிகளை அதிமுக ஒதுக்கியுள்ளது. கடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் மதுரை, கன்னியாகுமரி ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டு வென்ற இந்தக் கட்சிக்கு இம்முறை அதிமுக கூடுதலாக கோவை ஒதுக்கியுள்ளது.
முன்னதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வடசென்னை, நாகை, தென்காசி ஆகிய தொகுதிகளை அதிமுக ஒதுக்கியது. அவர்களை விட நாங்கள் பெரிய கட்சி என்று கூறி 4 தொகுதிகளைக் கேட்டது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட். ஆனால், அதற்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தயாராக இல்லாததால் சிக்கல் நீடித்தது.
இந்தக் கட்சிக்கு மதுரை, திண்டுக்கல், கன்னியாகுமரி ஆகிய தொகுதிகளை தர அதிமுக முன் வந்தது. ஆனால், திண்டுக்கல் வேண்டாம், திருப்பூரைத் தாருங்கள் என்று போராடியது மார்க்சிஸ்ட்.
இந்தத் தொகுதியை மதிமுகவும் கேட்டதால், அதை அதிமுக தர மறுத்தது. இதனால் மதிமுக-மார்க்சிஸ்ட் இடையே சிக்கல் எழுந்தது. இரு தரப்பும் விட்டுத் தர மறுத்து வந்தனர். இதனால் சிக்கல் பெரிதாகவே திருப்பூரை விட்டுத் தந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தான் விரும்பும் கோவையைக் கேட்டது.
ஆனால், திண்டுக்கல் தான் என அதிமுக அடம் பிடிக்க. கோவை என்று சிபிஎம் ஒற்றைக் காலில் நிற்க கூட்டணியே முறியும் நிலை உருவானது.
இந் நிலையில் சிபிஎம் கேட்ட கோவையை வழங்க அதிமுக முன் வந்தது. இதையடுத்து சிக்கல் முடிவுக்கு வந்துள்ளது.
இறுதியாக மதுரை, கன்னியாகுமரி, கோவை ஆகிய தொகுதிகளை அதிமுக ஒதுக்கியுள்ளது. இதை மார்க்சிஸ்ட் ஏற்றுக் கொண்டுவிட்டது. இதையடுத்து இது தொடர்பான தேர்தல் உடன்படிக்கையில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் என்.வரதராஜனும் கையெழுத்திட்டனர்.
மதுரையில் அழகிரி-சிபிஎம் மோதல்:
இதன் மூலம் மதுரையில் திமுக வேட்பாளர் அழகிரியுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மோதுகிறது. ஏற்கனவே இந்த தொகுதியில் இரண்டு முறை மார்க்சிஸ்ட் வேட்பாளர் மோகன் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கன்னியாகுமரி தொகுதியில் திமுகவின் ஹெலன் டேவிட்சனுடன் சிபிஎம் மோதுகிறது. இதன்மூலம் மூன்றில் 2 தொகுதிகளில் திமுகவுடன் மோதும் சிபிஎம் மூன்றாவது தொகுதியான கோவையில் காங்கிரசுடன் மோதுகிறது.