தென்காசி-சென்னை ரயிலில் மதிமுக ஓட்டு வேட்டை
தென்காசி: தென்காசி - சென்னை சிறப்பு கோடை ரயிலில் நேற்று மதிமுகவினர் பயணிகளை சந்தித்து ஓட்டு வேட்டை நடத்தினர்.
தென்காசியில் மதிமுகவினர் நூதன முறையில் தேர்தல் பிரசாரத்தை துவங்கினர். கோடை விடுமுறையை முன்னிட்டு நாடு முழுவதும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
செங்கோட்டையில் இருந்து ஞாயிறு தோறும் சென்னைக்கு கோடை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. முதன் முதலாக நேற்று மாலை 2.40 மணிக்கு செங்கோட்டையிலிருந்து கோடை சிறப்பு ரயில் எண் 610 சென்னைக்கு புறப்பட்டது.
சிறப்பு ரயில் தென்காசி ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்ததும் நகர மதிமுக செயலாளர் வெங்கடேஸ்வரன் தலைமையில் அக்கட்சியினர் சிறப்பான வரவேற்பு அளி்த்தனர்.
ரயிலில் மதிமுக கொடி...
ரயில் இன்ஜின் முன்பகுதியில் வாழை மரங்கள், மாலைகள் கட்டப்பட்டு, தோரணம் அமைக்கப்பட்டது. மதிமுக கொடியையும் ரயிலில் அக்கட்சியினர் கட்டினர். ரயில்வே பயணிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. ரயில்வே பயணிகளிடம் மதிமுக தொண்டர்கள் ஓட்டு வேட்டையாடினர்.
தங்கள் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் பம்பரம் சின்னத்திற்கு ஓட்டு போடும்படி ரயில்வே பயணிகளிடம் கூறினர். மேலும் தங்களது கூட்டணி கட்சி வேட்பாளர்களையும் ஆதரித்து ஓட்டு போடும்படி பயணிகளிடம் பிரச்சாரம் செய்தனர்.
டில்லியில் நடந்த மதிமுக உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்க வைகோ ரயில்வே துறை அமைச்சர் லாலு பிரசாத் யாதவ்வை சந்தித்து கோடை கால சிறப்பு ரயில்கள் தமிழகத்தில் அதிகளவில் விட வேண்டும் என கேட்டுக் கொண்டார். இதனையடுத்து செங்கோட்டையிலிருந்து சென்னைக்கு கோடை கால சிறப்பு ரயில் ஞாயிறு தோறும் இயக்கப்படுகிறது.