சென்னை படகு விபத்து-3 பேர் பலி, 13 பேரை காணவில்லை
சென்னை: சென்னை அருகே 20 பேர்களுடன் கடலில் உல்லாச சுற்றுலா சென்ற படகு மூழ்கியது. இதில் 3 பேர் உயிரிழந்தனர். 4 பேர் தப்பி கரை சேர்ந்தனர். மற்றவர்கள் கதி என்ன ஆனது என தெரியவில்லை.
சென்னை எண்ணூரில் நேற்று நடந்த அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் திருவிழாவுக்கு சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டமாக வந்து குவிந்தார்கள். கோயில் விழாவுக்கு வரும் மக்கள் கடலில் படகு சவாரி போவது வழக்கம்.
நேற்று திருவிழாவுக்கு வந்தவர்களில் 20 பேர்களை சுமந்து மதியம் சுமார் 2.30 மணிக்கு படகு ஒன்று எண்ணூருக்கு அருகே கடலுக்குள் சென்றது. அந்த படகில் 10 பேருக்கு மேல் செல்வது கடினம். ஆனால், 20 பேர் சென்றதை அடுத்து படகு பாரம் தாங்க முடியாமல் கடலில் தத்தளித்தது.
இந்நிலையில் அங்கு திடீரென ராட்சத அலைகள் எழுந்தது. அதில் சிக்கிய படகு தலைகீழாக கவிழ்ந்தது. இதில் படகில் இருந்த 20 பேரும் மூழ்கினார்கள்.
இதில் பயணம் செய்த இமயவர்மன், ராஜசேகர், மணிமாறன், முனியசாமி ஆகிய 4 பேரும் நீந்தி கரைக்கு வந்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து கடலோர காவல் படை மற்றும் தீயணைப்பு துறையினரும் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்தனர்.
அவர்கள் ஆசைத்தம்பி, நாகராஜ், பிளஸ் 1 மாணவர் வினோத்குமார் உள்ளிட்ட மூன்று பேரின் உடல்களை மீட்டனர். மற்ற 13 பேரின் நிலைமை என்ன ஆனது என்பது தெரியவில்லை. நேற்று இரவு முழுவதும் போலீசார் தேடிய போதும் இருட்டு அவர்களுக்கு தடங்கலை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை ஹெலிகாப்டர் மூலம் தேடுதல் பணி தொடர்கிறது.












Click it and Unblock the Notifications