யுஎஸ்:மனைவி ஓட்டம்-5 குழந்தைகளை கொன்று கணவன் தற்கொலை
வாஷிங்டன்: அமெரிக்காவில் மனைவி வீட்டைவிட்டு கள்ளக்காதலுடன் ஓடியதால் கோபமடைந்த கணவர் ஒருவர் தனது 5 குழந்தைகளையும் கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அமெரிக்காவின் வாஷிங்கடன் மாகாணம் டிரைலர் பார்க் என்ற இடத்தை சேர்ந்தவர் ஜேம்ஸ் ஹரிசன் (34). இவரது மனைவியின் பெயர் ஏஞ்சலா. இவர்களுக்கு மேக்சின் (16), சமந்தா (14), ஜோமி (11), ஹீதர் (8), ஜேம்ஸ் (7) என ஐந்து குழந்தைகள் இருந்தனர்.
ஏஞ்சலாவுக்கும் மற்றொரு வாலிபருக்கும் கள்ளத்தொடர்பு இருப்பது ஜேம்சுக்கு சமீபத்தில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து இருவருக்கும் இடையி்ல் அடிக்கடி சண்டை எழுந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் ஏஞ்சலா தனது கள்ளக்காதலனுடன் வீட்டைவிட்டு ஓடிவிட்டார். இதையறிந்த ஜேம்சுக்கு அடக்க முடியாத ஆத்திரம் வந்துள்ளது. இதையடுத்து தனது நடமாடும் வீட்டுக்கு வந்த அவர் தனது ஐந்து குழந்தைகளை சுட்டு கொன்றார். நான்கு குழந்தைகள் படுக்கை அறையிலும், ஒரு குழந்தை குளியலறையிலும் பிணமாக கிடந்தனர்.
இதையடுத்து வீட்டைவிட்டு வெளியே ஜேம்ஸ் தனது மனைவி மற்றும் அவளது கள்ளக்காதலனை சுட்டுக் கொல்ல காரில் கிளம்பினார். பின்னர் குழந்தைகளை கொன்றதை நினைத்து வருந்தி தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில் ஜேம்ஸ் வீட்டுக்கு வந்த உறவினர் வெகு நேரம் தட்டியும் கதவை திறக்கவில்லை என ஜன்னல் வழியாக எட்டி பார்த்துள்ளார். அப்போது படுக்கையில் குழந்தைகள் பிணமாக கிடைப்பதை அறிந்த அவர் போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார். போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அமெரிக்காவின் பல மாகாணங்களிலும் குடும்ப பிரச்சினை, மன அழுத்தம் போன்ற சாதாரண பிரச்சினைகளுக்காக துப்பாக்கியை கையில் எடுத்து கொண்டு அடுத்தவர்கள் உயிரை எடுக்கும் கொடூர சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருவது அமெரிக்க அரசுக்கு பெரும் தலைவலியை உருவாக்கியுள்ளது.