பெங்களூர் வள்ளுவர் சிலையை எதிர்ப்பது பாஜகதான்: எஸ்.ஆர்.பி பாய்ச்சல்
பெங்களூர்: பெங்களூரில் நீண்ட காலமாக திருவள்ளுவர் சிலை திறக்கப்படாமல் இருப்பதற்கு பாஜக போட்டு வரும் முட்டுக்கட்டைதான் காரணம் என தமிழக சட்டசபை முன்னாள் காங்கிரஸ் தலைவரும், கர்நாடக மாநில காங்கிரஸ் தேர்தல் பணிக்குழு ஒருங்கிணைப்பாளருமான எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் கூறியுள்ளார்.
கர்நாடக மாநில காங்கிரஸ் தேர்தல் பணிக்குழு ஒருங்கிணைப்பாளராக தமிழகத்தைச் சேர்ந்த எஸ்.ஆர்.பியை நியமித்துள்ளனர்.
கர்நாடகத்தில் உள்ள தமிழர்களின் வாக்குகளைக் கவரும் வகையில் எஸ்.ஆர்.பியை இப்பொறுப்பில் நியமித்துள்ளனர்(எஸ்.ஆர்.பியின் தாய் மொழி தெலுங்கு என்பது குறிப்பிடத்தக்கது).
நேற்று பெங்களூர் லிங்கராஜபுரத்தில், சர்வக்னர் தொகுதி காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம் முன்னாள் அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் பேசுகையில்,
கர்நாடகாவின் தலைநகர் பெங்களூரில் பல மொழி பேசுவோர், பல மதங்களை சேர்ந்தோர் இணைந்து வாழ்கின்றனர்.
பா.ஜ.க சிறுபான்மையினர் மீது திடீர் அக்கறை காட்டி வருகிறது. இதுநாள் வரை அனைவரின் வாழ்வுரிமையை காப்பாற்றியது காங்கிரஸ்தான் என்பதை நாட்டு மக்கள் அறிவார்கள்.
திருவள்ளுவர் அனைவருக்குமே பொதுவானவர். அவரது சிலையை பெங்களூரில் நிறுவ காங்கிரஸ் ஆட்சியில் அனுமதி வழங்கப்பட்டது. அதனை திறக்க விடாமல் தடுப்பதற்கான வழக்கில் ஆஜராகியவர் பா.ஜ.கவைச் சேர்ந்த பிரமிளா நேசர்கி. இதனை பெங்களூர் மக்கள் மறக்க மாட்டார்கள்.
தமிழர்களிடையே மோதல் ஏற்படுத்தி ரத்தம் சிந்தினால் அதில் ஆதாயம் தேடப் பார்க்கிறார்கள். தமிழர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த நாடு அனைவருக்கும் சொந்தம். குறிப்பிட்ட ஒரு பிரிவினருக்கு மட்டுமே சொந்தமல்ல என்றார் எஸ்.ஆர்.பி.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பங்காரப்பா முதல்வராக இருந்த காலத்தில்தான் திருவள்ளுவர் சிலை திறக்க விடாமல் முடக்கி வைக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.