ராமநாதபுரம் தேமுதிக வேட்பாளருக்கு கொலை மிரட்டல்
ராமநாதபுரம்: நடிகர் ஜே.கே. ரித்தீஷுக்கு எதிராக போட்டியிடக் கூடாது. விலகி விட வேண்டும். இல்லாவிட்டால் தொலைத்து விடுவோம் என கூறி ராமநாதபுரம் தொகுதி தேமுதிக வேட்பாளர் சிங்கை ஜின்னாவுக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது.
இதுகுறித்து சிங்கை ஜின்னா போலீஸில் புகார் கொடுத்துள்ளார். போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம் தொகுதியில் திமுக சார்பில் ஜே.கே. ரித்தீஷ் போட்டியிடுகிறார். தேமுதிக சார்பில் சிங்கை ஜின்னா போட்டியிடுகிறார்.
பாஜக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.திருநாவுக்கரசர் போட்டியிடவுள்ளார்.
அதிமுக கூட்டணியில் யார் இங்கு வேட்பாளர் என்பது தெரியவில்லை.
இந்த நிலையில், சிங்கை ஜின்னாவுக்கு தொலைபேசி மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
அதில் பேசிய நபர், ஜே.கே.ரித்தீஷுக்கு எதிராக போட்டியிடுகிறாயா, அவரை எதிர்த்துப் போட்டியி்டடால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியுள்ளான்.
இந்த கொலை மிரட்டல் குறித்து சாயல்குடி காவல் நிலையத்தில் ஜின்னா புகார் கொடுத்துள்ளார். போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பண பேரம்-விஜயகாந்த் மீது புகார்:
இந் நிலையில் சமுதாய மாற்றம் விரும்பும் இந்திய மக்கள் சங்கம் என்ற அமைப்பின் சார்பில் தலைவர் மாரிக்குமார் விஜய்காந்துக்கு எதிராக தேர்தல் கமிஷனுக்கு புகார் அனுப்பியுள்ளார்.
அதில், 'கூட்டணியில் சேர்ந்து கொண்டால் 15 சீட் தருகிறோம். பல கோடி ரூபாய் தருகிறோம் என்றார்கள். தான் அதற்கு விலை போகவில்லை' என்றும், எத்தனை மிரட்டல்கள் வந்தாலும் பயப்படமாட்டேன், சிலர் என்னிடம் சித்து விளையாட்டு காட்ட நினைக்கின்றனர் என்றும் விஜயகாந்த் பேசியதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
இது தேர்தல் விதிகளுக்கும், ஜனநாயக நடைமுறைகளுக்கும் புறம்பாக உள்ளது. ஒரு பொறுப்பான கட்சி தலைவர், எம்எல்ஏ என்ற முறையில் முறைகேடான வழிகளில் கோடிக் கணக்கில் பணம் தர முன் வந்தவர்களையும், கூட்டணிக்காக தன்னை மிரட்டியவர்களையும் அவர் சட்டத்தின் முன் நிறுத்தியிருக்க வேண்டும்.
தேமுதிகவில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் ஒரு பேட்டியில், காங்கிரஸ், திமுகவை ஜெயிக்க வைக்க விஜயகாந்த் தனித்து நிற்கிறார். வெகுமதிகளுக்காக வீராவேசத்தை அடகு வைத்துவிட்டார் என்று கூறியுள்ளதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
விஜயகாந்த் தெரிவித்துள்ள பண பேரம் குறித்த கருத்துக்கள் தேர்தல் விதிமுறைகளுக்கு எதிரானவை என்பதால் தேர்தல் ஆணையம் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அனைவரிடமும் முழுமையான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.