அரசியல் கட்சிகள் தண்ணீர் பந்தல் அமைக்க தடை
சென்னை: தண்ணீர் பந்தல் அமைத்து அதன்மூலம் வாக்காளர்களை கவர அரசியல் கட்சிகளுக்கு அனுமதி வழங்கப்படாது. தேர்தல் முடியும் வரை அரசியல் கட்சிகளுக்கு தண்ணீர் பந்தல்கள் அமைப்பதற்கு விரைவில் தடை கொண்டுவர தேர்தல் ஆணையம் முயற்சித்து வருகிறது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் நடைமுறைகள் நாடு முழுவதும் நடைமுறைக்கு வந்துள்ளன. இதை தவிர்த்து தேர்த்ல ஆணையம் பல புதிய விதிமுறைகளை கொண்டு வந்துள்ளது. இதன்மூலம் தேர்தலை நியாயமான முறையில் நடத்த முழு முயற்சி செய்து வருகிறது.
வீட்டு சுவர்களில் உரிமையாளர்கள் உத்தரவின்றி விளம்பரங்கள் எழுத கூடாது என்றும், அரசு அலுவலகங்களில் தலைவர்கள் படங்கள் இருக்க கூடாது என்றும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் கோடை காலம் துவங்கிவிட்டதை அடுத்து, வெயில் மக்களை வாட்டி வருகிறது. நேற்று முதல் சென்னை செங்குன்றம் பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையம் அருகில் வாகன ஓட்டிகளுக்கு தண்ணீர், நீர்மோர் மற்றும் ஜுஸ் போன்றவை வழங்கப்பட்டு வருகின்றன.
இதை தொடர்ந்து பல கட்சிகளும் தண்ணீர் பந்தல் வைத்து வாக்காளர்களை கவர முயற்சித்து வருகின்றனர். தேர்தல் நேரம் என்பதால் அரசியல் கட்சிகள் குடிக்க நீர்மோர் கூட கொடுக்க தயாராக இருக்கிறார்கள்.
இது வாக்காளர்களை கவரும் யுக்திகளில் ஒன்றாக கருதப்படுவதால், தேர்தல் முடியும் வரை அரசியல் கட்சிகள் தண்ணீர் பந்தல் அமைக்க தடை விதிக்க, தேர்தல் ஆணையம் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.
தண்ணீர் பந்தல் வைத்து மக்களுக்கு உதவ வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் கட்சிகள், கட்சி கொடி, தலைவர்கள் படம், கட்சி சின்னம் என எந்த தோரணமும் இல்லாலம் தண்ணீர் பந்தல் வைத்து கொள்ள அனுமதி அளிக்கப்படும். இதற்கான உத்தரவுகளை தேர்தல் ஆணையம் விரைவில் பிறப்பிக்க இருப்பதாக தெரிகிறது.