மதுரை கும்பாபிஷேகத்தால் ஆளுங்கட்சிக்கு ஆபத்து-ஜோதிடர்
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடப்பதால் ஆளுங்கட்சிக்கு ஆபத்து ஏற்படும் என கேரள ஜோதிடர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை 8ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான பணிகள் முடிந்து, மார்ச் 26ம் தேதியில் இருந்து விக்னேஸ்வர பூசை உள்ளிட்ட சிறப்பு பூசைகள் தொடங்கி நடைபெற்ற வண்ணம் உள்ளது.
இந்த கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள மதுரை, மற்றும் தென் மாவட்டத்தில் இருந்து பல லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த நிலையில், விரோதி ஆண்டு துவங்குவதற்கு சில நாட்களே உள்ள நிலையில் முந்திய தேதியில் கும்பாபிஷேகம் நடத்தினால் அழிவுகள் வரலாம். ஆதிகாரத்தில் இருப்பவர்களுக்கு ஆபத்து வரலாம் என்று ஜோதிடர்கள் சிலர் 'கிளப்பி' விட்டுள்ளனர்.
இது குறித்து பிரபல ஜோதிடர் ஒருவர் கூறுகையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கேரளாவில் இருந்து சோட்டாணிக்கரையைச் சேர்ந்த ஒரு ஜோதிடர் வருகை தந்துள்ளார். அவர் தான் இந்த விஷயத்தை தமிழகத்தில் சொல்லாமல், கேரளாவில் போய் சொல்லியுள்ளார். அதை வைத்துத்தான் சிலர் இப்படி பேசு வருகின்றனர் என்றார்.
ஆளும் திமுக தரப்பில் விசாரித்த போது, எல்லா நாட்களும் கடவுள் படைத்த நாட்கள் தான். மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்து விட்டால் திமுக அரசுக்கு நல்ல பெயர் கிடைத்துவிடுமோ என்று அஞ்சி எதிர்க்கட்சியினர் கிளப்பிவரும் வதந்தி தான் இது என்று சொல்கின்றனர்.