நெல்லை சீட்-காங்கிரசில் கோஷ்டி தகராறு
நெல்லை: நெல்லை தொகுதியை திமுகவிடம் இருந்து பெற்ற மகிழ்ச்சியை விட அந்த சீட் யாருக்கு என்ற குழப்பமே அங்குள்ள காங்கிரசாரை திணறச் செய்து வருகிறது. தனுஷ்கோடி ஆதித்தன், வசந்த்குமார் என பல முக்கிய தலைவர்கள் தங்களுக்கு தான் சீட் வேண்டும் என தலைமையகத்திடம் அடம்பிடித்து வருகின்றனர்.
நெல்லை மாவட்டத்தில் நெல்லை, தென்காசி ஆகிய இரண்டு நாடாளுமன்ற தொகுதிகளிலும் திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இது திமுகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில் காங்கிரஸ் கட்சியினர் குஷி அடைந்தனர்.
என்றாலும் இரண்டு தொகுதிகளிலும் யாருக்கு சீட் என்ற பிரச்சினை தற்போது தலைதூக்கி உள்ளது. இதையடுத்து தொகுதியில் போட்டியிட கடும் போட்டா போட்டி நடக்கிறது.
கடந்த தேர்தலில் இங்கு காங்கிரஸ் வேட்பாளராக தனுஷ்கோடி ஆதித்தன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அதி்முக வேட்பாளர் அமிர்த கணேசன் தோல்வி அடைந்தார்.
நாடாளுமன்ற தொகுதி சீரமைப்புக்கு பிறகு தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து சில தொகுதிகள் நீக்கப்பட்டு நெல்லை தொகுதி தற்போது முழுக்க முழுக்க நெல்லை மாவட்டத்தில் 6 சட்டசபை தொகுதிகளை கொண்டுள்ளது.
நெல்லை தொகுதிக்காக காங்கிரஸ் கட்சியில் ஏராளமானோர் விண்ணபித்து சீட்டை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதில் தனுஷ்கோடி ஆதித்தன், அவரது மகள், நாங்குநேரி எம்எல்ஏ வசந்தகுமார், மோகன் குமராராஜா, சார்லஸ், காமராஜ் உள்பட ஏராளமானோர் அந்தந்த கோஷ்டிகளுடன் கட்சி தலைவர்களை முற்றுகையிட்டு வருகின்றனர்.
இந்த தேர்தலிலும் தங்களுக்குதான் சீட் என தனுஷ்கோடி ஆதித்தன் ஆதரவாளர்கள் உறுதியாக நம்புகின்றனர். எனினும் இவருக்கு சீ்ட் கொடுப்பதற்கு அந்த தொகுதியில் சில காங்கிரசாரே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஏற்கனவே எம்பியாக இருந்தபோதும், அமைச்சராக இருந்த போதும் அவருக்கு தொகுதிக்கு ஒன்றுமே பெரிதாக செய்யவில்லை என அவருக்கு புகார் கூறிவருகின்றனர். இவர்களது புகார்களை எதிர்கட்சியினர் அப்படியே பிரச்சாரத்துக்கு பயன்படுத்தி கொள்ளும் அவளுக்கு அவர் மீது குறை கூறுகின்றனர்.
அதே நேரத்தில் நாங்குநேரி எம்எல்ஏவாக இருந்து வரும் வசந்தகுமாருக்கு சீட் தர வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மாநில வர்த்தக காங்கிரஸ் தலைவர், எம்எல்ஏ, டிவி தொழில் பிண்ணனி, வர்த்தக துறையில் செல்வாக்கு உள்பட பல்வேறு அம்சங்களின் காரணமாக மக்களிடம் ஏற்கனவே பிரபலமானவர் என்பதால் இவருக்க சீட் அளிக்க வேண்டும் என்று இவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஏற்கனவே எம்எல்ஏவாக இருந்தவருக்கு ஏன் சீட் கொடுக்க வேண்டும். தேர்தலில் புதுமுகங்களுக்கும், இளைஞர்களுக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும். அப்போதுதான் கட்சி புத்துணர்வுடன் செயல்படும் என இன்னொரு தரப்பினர் கூறுகின்றனர்.
இப்படி ஒவ்வொரு நிர்வாகிகளும் ஒவ்வொருவரை பற்றி சொல்வதும் மற்றவர்களை குறைத்து கூறுவதும் நெல்லை காங்கிரஸ் வட்டாரத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இவர்களில் சிலர் எப்படியும் தேர்தல் டிக்கெட் வாங்கிவிட வேண்டும் என டெல்லிக்கும்,சென்னைக்கும் பறந்து வருகின்றனர்.