திருச்சி அதிமுக வேட்பாளர் ஸ்ரீதர் வாண்டையார்?
திருச்சி: திமுக கூட்டணியில் திருச்சி தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அந்த கட்சியின் சார்பில் போட்டியிட மேயர் சாருபாலா, தொழிலதிபர் ரவி முருகையா உள்ளிட்ட பலர் முட்டி மோதி வருகின்றனர்.
இந்தத் தொகுதியில் அதிமுக போட்டியிட உள்ள நிலையில்
அதிமுக சார்பில் மூவேந்தர் முன்னேற்றக் கழக தலைவர் ஸ்ரீதர்வாண்டையார் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது. அதிமுக சின்னத்தில் இவர் போட்டியிடலாம் என்கிறார்கள்.
இவர் கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் திருவெறும்பூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
தற்போது திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட அதிமுக தலைமை கழகத்தில் விருப்ப மனு கொடுத்துள்ளதோடு அக் கட்சியின் பொதுச் செயலாளர் நடத்திய நேர்காணலிலும் பங்கேற்றார்.
இவருக்கு சசிகலாவின் முழு ஆதரவும் இருப்பதால் திருச்சி தொகுதியில் நிறுத்தப்படுவார் என்று மூவேந்தர் முன்னேற்ற கழகத்தினர் கூறுகின்றனர்.
தேசிய லீக் தேர்தல் பணிக் குழு:
இதற்கிடையே திருச்சி மாவட்ட இந்திய தேசிய லீக் கட்சி, அதிமுக கூட்டணியின் வெற்றிக்குப் பாடுபட தேர்தல் பணிக் குழுவை அமைத்துள்ளது.
இக்கட்சியின் மாநில, மாநகர செயற்குழுக் கூட்டம் திருச்சியில் அண்மையில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ஜி. கௌஹர்ஜான் தலைமை வகித்தார்.
மாவட்டத் துணைத் தலைவர் யூசுப் பாட்ஷா, மாவட்ட இணைச் செயலர்கள் நியாஸ், அபுபக்கர் உள்ளிட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.
கூட்டத்தில் மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்காகத் தேர்தல் பணியாற்றுவதற்காக புதிய தேர்தல் பணிக் குழு அமைக்கப்பட்டது.
மாநிலச் செயலர் ஜாகீர், மாவட்டத் தலைவர் ஜி. கௌஹர்ஜான், புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் ஜெய்னுலாப்தீன், திருச்சி மாவட்டச் செயலர் ஏ. அன்வர் உசேன், திருச்சி மாவட்டத் துணைத் தலைவர் ஆர். முகமது யூசுப் பாட்ஷா ஆகியோர் அதில் இடம் பெற்றுள்ளனர்.