கூட்டணி: வெளியேறுங்கள்..வைகோவுக்கு 'மாணவர்கள் ஷாக்'!
சென்னை: இலங்கை விவகாரம் தொடர்பாக ரயில்களில் பிரச்சாரம் செய்து வரும் தென் மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 200 மாணவர்கள் ரயில் முலம் நேற்று சென்னை வந்தனர்.
அவர்களை வரவேற்க வைகோ வந்திருந்தார். ஆனால், அவரைப் பார்த்தவுடன் மாணவர்கள் எதிர்ப்பு கோஷமிட ஆரம்பித்துவிட்டனர்.
வைகோவே வெளியே போ.. இலங்கை தமிழர்க்கு எதிரான அதிமுக கூட்டணியை விட்டு வெளியே வா என்று மாணவர்கள் கோஷமிடவே அதிர்ந்துபோன வைகோ அங்கிருந்து அமைதியாக வெளியேறிவிட்டார்.
வைகோவை யாரும் அவமானப்படுத்தவில்லை..:
இந் நிலையில் இது குறித்து மதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில்,
எத்தனையோ அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியிலு் இலங்கையில் போர் நிறுத்தம் வலியுறுத்தி ரயில் பயண வழித்தட பிரச்சாரம் மேற்கொண்டு வரும் மாணவர்களை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ 300க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகளுடன் எழும்பூர் ரயில் நிலையத்தில் காத்திருந்து வரவேற்றார்.
அப்போது மாணவர்கள் பிளாட்பாரத்தில் அமர்ந்து வைகோவின் பேச்சை கேட்க விரும்பினார்கள். இதனிடையே மாணவரல்லாத இருவர் அரசியல்வாதிகளே வெளியேறுங்கள் என்றும், இன்னொருவர் கூட்டணியை விட்டு வெளியேறுங்கள், ஈழத் தமிழர் கூட்டணியை அமையுங்கள் என்றும் கோஷமிட்டனர்.
இன்னொருவர், திருமாவளவனைக் கேட்கிறோம்..கூட்டணியை விட்டு வெளியே வாருங்கள், டாக்டர் ராமதாஸைக் கேட்கிறோம்.. கூட்டணியை விட்டு வெளியே வாருங்கள், அண்ணன் வைகோவை கேட்கிறோம்.. கூட்டணியை விட்டு வெளியே வாருங்கள் என்றும் கோஷம் எழுப்பினர்.
அப்போது மாணவர் அல்லாத ஒருவர் அரசியல்வாதிகளை நம்பாதீர்கள் என்றார்.
இதையடுத்து அவர்களிடம் தம்பிகளே நான் எங்கள் கட்சிக்கு ஆதரவு கேட்டு வரவில்லை. ஓட்டு சேகரிக்கவும் வரவில்லை. முத்துக்குமார் ஏற்றி வைத்த தியாகச் சுடரை மாணவர்கள் தான் இனி ஏந்திச் செல்ல வேண்டும். அதனால் உங்களை வாழ்த்தவே வந்தேந்.
ஈழத் தமிழர்களுக்காகவும் விடுதலைப் புலிகளுக்காகவும் இன்னல்களையும் தியாகங்களையும் ஏற்றவன் நான். ஈழத் தமிழர்களுக்காக தீக்குளித்த ஒவ்வொரு தியாகிக்கும் வீரவணக்கம் செலுத்தியுள்ளேன்.
தொடர்ந்து ஈழத் தமிழர்களுக்காக போராடுகிறவன் இந்த வைகோ. அரசியல் லாபத்துக்காக அல்ல என்று பொறுமையாகக் கூறிவிட்டு வந்தார்.
அப்போது வைகோவுடன் இருந்த 300 தொண்டர்களும் அமைதி காத்து திரும்பினர்.
ஒரு சிலர் திட்டமிட்டு செய்த சிறிய சம்பவம் தானே தவிர மாணவர்கள் வைகோவை அவமதிக்கவில்லை என்று அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழர் படுகொலை-இந்திய அரசே காரணம்: வைகோ
இந் நிலையில் வைகோ வெளியிட்டுள்ள்ள அறிக்கை: இலங்கை தமிழர்களை மரண பயங்கரம் சூழ்ந்துள்ளது. கடந்த 2 நாட்களாக வரும் செய்திகள் நெஞ்சை பதற வைக்கின்றன. நாள்தோறும் நூற்றுக்கணக்கில் கொல்லப்பட்டு வந்த நிலை மாறி, அடுத்த சில நாட்களுக்குள் 3 லட்சம் தமிழர்கள் படுகொலைக்கு உள்ளாகும் பேரழிவு அச்சுறுத்துகிறது.
இலங்கையில் போர் நிறுத்த வேண்டும் என்ற ஆறரை கோடி தமிழ் மக்களின் கோரிக்கையை இந்திய அரசு உதாசீனப்படுத்திவிட்டு போரை நடத்திக்கொண்டிருக்கிறது. இதுவரை இந்திய அரசு, போரை நிறுத்தச் சொல்லவில்லை.
தமிழர்கள் சிந்தும் ஒவ்வொரு துளி ரத்தத்திற்கும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசே காரணம். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுதான் இலங்கைக்கு ஆயுதங்களைக் கொடுத்தது, ரேடார்களைக் கொடுத்தது, ராணுவத்தையும் அனுப்பி வைத்து தமிழினப் படுகொலைக்கு உறுதுணையாக இருக்கிறது.
தமிழர்களுக்கு துரோகம் செய்யும் மத்திய அரசை எச்சரிக்கிறோம். உடனடி போர் நிறுத்தம் ஏற்படுத்த முன்வராவிட்டால் அதன் பின்விளைவுகள் மிக விபரீதமாக இருக்கும் என்று எச்சரிக்கிறேன்.
இலங்கை தமிழர்களை பாதுகாக்கவும், இந்திய அரசின் துரோகத்தை கண்டித்தும் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் புதன்கிழமை அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
சென்னையில் கலெக்டர் அலுவலகம் முன்பு காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இதில் தமிழ்பெருமக்கள் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் வைகோ.












Click it and Unblock the Notifications