இத்தாலி பூகம்பம்-பலி 179 ஆக உயர்வு
ரோம்: இத்தாலியில் நேற்று அதிகாலை ஏற்பட்ட பூகம்பத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 179 ஆக உயர்ந்துள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.
இத்தாலிய தலைநகர் ரோமில் இருந்து சுமார் 100 கிமீ., தொலைவில் உள்ள அகுலா என்ற நகரத்தில் இன்று அதிகாலை 3.30 மணிக்கு திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 6.3 ரிக்டர் அளவுக்கு பதிவானது.
இதில் அங்கிருந்த பல்கலைக்கழக கட்டிடம், கிறிஸ்துவ ஆலயம் மற்றும் வீடுகள் உள்ளிட்ட பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இடிந்து விழுந்த பல்கலைக்கழக கட்டிடத்தின் ஒரு பாதியில் தூங்கி கொண்டிருந்த மாணவர்களில் பெரும்பாலோனர் உயிரிழந்தனர்.
அதிகாலை நேரத்தில் தூங்கி கொண்டிருந்த மக்கள் அலறி அடித்து கொண்டு வீடுகளை விட்டு வெளியேறினர். இத்தாலியின் கிழக்கு பகுதியில் உள்ள சில மலை கிராமங்களிலும் பூகம்பத்தை மக்கள் உணர்ந்ததாகவும், அங்கு சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. அன்னோ என்ற சிறிய நகரம் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டது.
இதையடுத்து பலியானவர்களின் எண்ணிக்கை 179 ஆக உயர்ந்துள்ளது. 1,500க்கு மேற்பட்டவர்கள் கை, கால்களை இழந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 50 ஆயிரம் பேர் வீடுகள் இன்றி நேற்று இரவு முழுவதும் தெருக்களில் படுத்து உறங்கினர்.
தொடரும் அதி்ர்வு...
இந்த பூகம்பத்துக்கு பின்னர் தொடர்ந்து லேசான நில அதிர்வுகள் ஏறபட்டு வருவதாகவும், இதுவரை 280 நில அதிர்வுகள் பதிவு செய்யபப்பட்டிருப்பதாக இத்தாலிய எரிமலை தொடர்பான ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நில அதிர்வுகளில் அதகிபட்சமாக இன்று காலை 1.15 மணிக்கு 4.8 ரிக்டர் அளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.