நாளை அதிமுக வேட்பாளர் பட்டியல்?!
சென்னை: மதிமுகவுடன் தொகுதி பங்கீடு சிக்கல் தீருமா தீராதா என்பது கேள்விக்குறியாகியுள்ள நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தனது வேட்பாளர்கள் பட்டியலை நாளை வெளியிடலாம் என்று தெரிகிறது.
அதிமுக சார்பில் 3,400 பேர் மனு செய்த நிலையில் அவர்களை 11 குழுவாகப் பிரித்து நேர்காணல் என்ற பெயரில் அட்வைஸ் செஷன் நடத்தினார் ஜெயலலிதா.
ஜாதகம், ராசி பார்த்து வேட்பாளர் பட்டியல் தயாராகிவிட்ட நிலையில் அதை பெளர்ணமி தினமான நாளை ஜெயலலிதா வெளியிடலாம் என்று கூறப்படுகிறது.
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு ஸ்ரீபெரும்புதூர், அரக்கோணம், திருவண்ணாமலை, சிதம்பரம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, புதுச்சேரி ஆகிய 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வடசென்னை, நாகப்பட்டினம், தென்காசி ஆகிய 3 தொகுதிகளும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மதுரை, கோவை, கன்னியாகுமரி ஆகிய 3 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன.
மதிமுகவுக்கு 4 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க அதிமுக தயாராக உள்ளதாகக் கூறப்படும் நிலையில் மிச்சமிருப்பது 23 தொகுதிகள்.
இந்தக் கூட்டணியில் சேர மனித நேய மக்கள் கட்சியும் முயல்வதாகக் கூறப்படுகிறது. அப்படிச் சேர்ந்தால் அவர்களுக்கு மயிலாடுதுறை அல்லது மத்திய சென்னை ஒதுக்கப்படலாம் என்கிறார்கள்.
இதற்கிடையே அதிமுக கூட்டணியில் ஆரம்பத்திலிருந்தே இடம் பெற்றுள்ள இந்திய தேசிய லீக் கட்சி தனக்கு வேலூர் தொகுதியை ஒதுக்க கோரியுள்ளது.
இது குறித்து அக்கட்சியின் மாநில தலைவர் இனாயத்துல்லா வாணியம்படியில் நிருபர்களிடம் கூறுகையில்,
அகில இந்திய அளவில் 20 தொகுதியில் இந்திய தேசிய லீக் கட்சி போட்டியிடுகிறது. தமிழகத்தில் அதிமுகவிடம் 2 தொகுதியை எங்கள் கட்சிக்கு ஒதுக்க கோரியுள்ளோம். குறிப்பாக வேலூர் தொகுதியை ஒதுக்க தொடர்ந்து பேசி வருகிறோம்.
கூட்டணியில் இடம் ஒதுக்கப்படாவிட்டால் சென்னையில் நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் விவாதித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
ஆனால், மனித நேய மக்கள் கட்சி அல்லது இந்திய தேசிய லீக் இரண்டில் ஒரு கட்சிக்கு மட்டுமே அதிமுகவில் ஒரு சீட் கிடைக்கலாம்.
இதையடுத்து மிச்சமுள்ள 22 இடங்களில் அதிமுக போட்டியிடலாம்.
இதற்கிடையே அதிமுக கூட்டுத் தொகை 5 வருவது போல 23 இடங்களில் போட்டியிட வேண்டும் என ஜோதிடர்கள் கூறியுள்ளதாகவும் ஒரு தகவல் உள்ளது. இதைச் சொல்லித்தான் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் மட்டுமே தர முடியும் என அதிமுக சொன்னது.
அப்படியென்றால் மனித நேய மக்கள் கட்சிக்கோ, இந்திய தேசிய லீக் கட்சிக்கோ சீட்டே தராமல் 23 தொகுதிகளிலும் அதிமுக போட்டியிடலாம்.
இன்று மாலை ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் நடக்கிறது. அதில் மதிமுக குறித்து முடிவெடுக்கப்பட்டுவிடும் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications