சோனியா-பிரியங்கா- ராகுலுக்கு குறி?-புலிகள் மறுப்பு
டெல்லி: விடுதலைப் புலிகள் இயக்கத்தால் ஆபத்து ஏற்படலாம் என்ற பீதியால், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அவரது மகன் ராகுல் காந்தி, மகள் பிரியங்கா காந்தி ஆகியோருக்கான பாதுகாப்பை அதிகரித்துள்ளது மத்திய உள்துறை. இவர்கள் தென் மாநிலங்களுக்கு பிரசாரத்திற்கு வரும்போது கூடுதல் பாதுகாப்பு அளிக்குமாறு மாநில டிஜிபிக்களையும் அது கேட்டுக் கொண்டுள்ளது.
அனைத்து மாநில டிஜிபிக்களுக்கும் இந்த உத்தரவு போயுள்ளது. குறிப்பாக தென் மாநிலங்களில் சோனியா மற்றும் அவரது குடும்பத்தினர் பிரசாரத்திற்கு வரும்போது கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே சாலை மார்க்கமாக சோனியா குடும்பத்தினர் செய்யத் திட்டமிட்டிருந்த பிரசாரத்தை உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்பேரில் காங்கிரஸ் குறைத்துக் கொண்டு விட்டது குறிப்பிடத்தக்கது.
1991ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது பிரசாரத்திற்காக ஸ்ரீபெரும்புதூர் வந்தபோதுதான் சோனியாவின் கணவர் ராஜீவ் காந்தி மனிதவெடிகுண்டுத் தாக்குதலுக்குப் பலியானார் என்பது நினைவிருக்கலாம்.
புலிகள திட்டவட்ட மறுப்பு:
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் அவரது மகள், மகன் ஆகியோரை கொல்ல நாங்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுவது சற்றும் உண்மையல்ல. அப்படி ஒரு திட்டம் எங்களிடம் கிடையவே கிடையாது என்று விடுதலைப்புலிகள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.
இதுகுறித்து விடுதலைப் புலிகள் அமைப்பு சார்பில் பத்திரிகை நிறுவனங்கள், தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு விளக்கம் தெரிவித்து இ-மெயில் அனுப்பப்பட்டுள்ளது.
அதில், துயரத்தில் மூழ்கியிருக்கும் தமிழர்களின் பிரச்சினையை திசை திருப்பும் வகையில், வேண்டும் என்றே அவதூறை விளைவிக்கும் வகையில் பரப்பப்படும் புனை செய்திகள் இவை.
ஈழத் தமிழர்களுக்கும், இந்திய மக்களுக்கும் இடையே காலம் காலமாக நிலவி வரும் நீடித்த நெருக்கத்தை சீர்குலைக்க இலங்கை அரசு முயற்சிக்கிறது. அதன் விளைவே இதுபோன்ற பொய் செய்திகள்.
எங்களால் சோனியா காந்திக்கோ அல்லது அவரது குழந்தைகளுக்கோ எந்தவித ஆபத்தும் வராது. அப்படிப்பட்ட எண்ணமே எங்களிடம் இல்லை என்று அதில் கூறப்பட்டுள்ளது.