செயலர் மாற்றம்-ஆணையம் மீது மாயாவதி பாய்ச்சல்
லக்னெள: எதிர்கட்சிகளின் புகார்களை சரியாக விசாரிக்காமல், உண்மையை ஆராய்ந்து பார்க்காமல் தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது. நியாயமான அதிகாரியை இடமாற்றம் செய்து, சட்டம், ஒழுங்கு சீர்குலையும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது என உபி முதல்வர் மாயாவதி தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேச மாநில உள்துறை முதன்மை செயலர் படே பகதூர் சிங், முதல்வர் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக பாஜக தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுத்தது. வருண் காந்தி, தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவதற்கு பகதூர் சிங் தான் மூளையாக இருந்து செயல்பட்டுள்ளதாக பாஜக கருதி வருகிறது.
இந்நிலையில் தேர்தல் ஆணையம் பகதூர் சிங்கை அப்பதவியில் இருந்து விடுவத்தது. இதனால் மாயாவதி கடும் அதிருப்தியடைந்துள்ளார். அவர் பகதூர் சிங்கிற்கு உத்தர பிரதேச அமைச்சரவைக்கான செயலர் பதவியை வழங்கியுள்ளார்.
இந்நிலையில் மாயாவதி நிருபர்களிடம் கூறுகையில்,
ஆதாரமற்ற புகார்களை கொண்டு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது. தேர்தல் ஆணையம் புகார்களை சரியாக விசாரிக்காமல் நியாயமான அதிகாரிகளை பணிமாற்றம் செய்து வருகிறது.
இதனால் மாநிலத்தில் சட்டம், ஒழுங்கு ஏற்படும் பிரச்சினை உருவாகியுள்ளது. பிரச்சாரத்தின் போது நானோ அல்லது மற்றவர்களோ தீவிரவாதிகளால் பாதிக்கப்பட்டால் அதற்கு தேர்தல் ஆணையம் தான் பொறுப்பு.
இது போன்ற இடமாற்றங்களால் மாநிலத்தில் தேர்தல் சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடக்காமல் போய்விடுமோ என்ற அச்சம் எனக்கு எழுந்துள்ளது.
ஆனால் தேர்தல் நேர்மையாக நடக்க வேண்டும் என்பதில் மாநில அரசு உறுதியாகவுள்ளது. தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலுக்கு இணங்க தேர்தல் விதிமுறைகளை யாரும் மீறிடாத வகையில் தீவிரமாக கண்காணிக்குமாறு அதிகாரிகளுக்கு ஆணை பிறப்பித்துள்ளேன்.
எனது கட்சி வேட்பாளர்களையும், தொண்டர்களையும்கூட தேர்தல் விதிமுறையை மதித்து நடக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளேன் என்றார் மாயாவதி.
20 அடி தூரத்தில் பத்திரிகையாளர்களுக்கு இருக்கை...
சமீபத்தில் டெல்லியில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது ஜர்னைல் சிங் என்ற நிருபர், உள்துறை அமைச்சர் சிதம்பரம் மீது ஷூவை வீசினார்.
இதையடுத்து மாயாவதி கலந்து கொண்ட பத்திரிகையாளர் சந்திப்பில் நிருபர்களுக்கும் மாயாவதிக்கும் இடையில் சுமார் 20 அடி தூரம் இருக்கும் வகையில் நாற்காலிகள் தள்ளிப் போடப்பட்டிருந்தன. மேலும், போலீசார் நிருபர்களை கூட்டம் முடியும் இமைகளை கூட மூடாமல் கண்காணித்தனர்.