நாகை: அன்று திமுக கூட்டணி 'மானம்' காத்தார்-இன்று எதிர்க்கிறார்
நாகப்பட்டிணம்: கடநத் 1989ல் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற ஒரே திமுக கூட்டணி எம்.பி. என்ற பெருமை கொண்ட செல்வராஜ் தற்போது நாகை தொகுதியில் திமுக வேட்பாளரை எதிர்த்து களமிறக்கப்பட்டுள்ளார்.
அதிமுக கூட்டணியில் இடம் பிடித்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வடசென்னை, நாகப்பட்டிணம், தென்காசி ஆகிய மூன்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
இதற்கான வேட்பாளர்களை இந்திய கம்யூனிஸ்ட் நேற்று வெளியிட்டது. அதில் நாகப்பட்டிணத்தில் செல்வராஜ் போட்டியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டிணம் தொகுதியில் இருந்து மூன்று முறை (1989, 96, 98)தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள செல்வராஜ் நான்காவது முறையும் வென்றுவிட வேண்டும் என்பதில் அதிக அக்கறையுடன் இருக்கிறார். தொகுதி மக்களுக்கு இவர் நன்கு பரிச்சயம் என்பதால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
இவருக்கு தொகுதி மக்களிடம் இருக்கும் செல்வாக்கை 1989 நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளிகாட்டியது. 1989ல் திமுக, கம்யூனிஸ்ட் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. எதிரணியில் அதிமுக, காங்கிரசுடன் கைகோர்த்திருந்தது.
திமுகவுக்கான எதிரான அலை, ராஜீவ் காந்தியின் சுறுசுறு பிரசாரம் ஆகியவற்றால் அதிமுக கூட்டணி 38 தொகுதிகளை கைப்பற்றியது. திமுகவுக்கு ஒரு தொகுதி கூட கிடைக்கவில்லை. அவர்களின் கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்ட்டுக்கு மட்டுமே ஒரு இடம் கிடைத்தது.
அப்போது நாகப்பட்டிணத்தில் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் போட்டியிட்ட செல்வராஜ் அங்கு 21 ஆயிரத்துக்கும் கூடுதலான வாக்குகளை வித்தியாசத்தில் வென்று, திமுக கூட்டணியின் மானம் காத்தார்.
தற்போது அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ள, இவருக்கு எதிராக திமுக சார்பில் ஏகேஎஸ் விஜயன் போட்டியிடுகிறார்.