தேர்தல் பணி-தமிழகத்தில் வனத்துறைக்கு விலக்கு
சென்னை: நாடாளுமன்ற தேர்தல் பணிகளில் இருந்து வனத்துறையினருக்கு விலக்கு அளிக்கப்படும் என தெரிகிறது.
வரும் மே 13ம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. இதையடுத்து தமிழக தேர்தல் ஆணையம் வழக்கம் போல் தேர்தல் பணிகளுக்கு அரசு ஊழியர்களை அழைத்துள்ளது.
தேர்தல் பணிகளுக்கு வனத்துறை பயன்படுத்துவது குறித்து தமிழ்நாடு தேர்தல் ஆணையம், வனவிலங்கு பாதுகாப்பு ஆர்வலர்களிடம் பேசிவிட்டு முடிவெடுக்க நினைத்தது.
இதையடுத்து வனவிலங்கு ஆர்வலர் சேகர் தத்தாத்ரி நேற்று தமிழ்நாடு தேர்தல் ஆணையாளர் நரேஷ் குப்தாவை சந்தித்து அறிக்கை ஒன்றை கொடுத்தார்.
அதில், வனவிலங்குகளுக்கு வேட்டைகாரர்களிடம் அதிக அச்சுறுத்தல் இருக்கிறது. சில கும்பல்கள் வனத்துறையினர் எப்போது தேர்தல் பணிகளுக்கு செல்வார்கள் என விலங்குகளை வேட்டையாட காத்திருக்கிறது.
மேலும் தற்போது வனத்துறையில் ஆள் பற்றாக்குறை உள்ளது. வனத்துறையினரை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தினால் விலங்குகளுக்கு பாதுகாப்பு குறைவு ஏற்படும். அவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என அதில் கூறியுள்ளார்.
இதன் பின்னர் பத்திரிகை ஒன்றுக்கு சேகர் தத்தாத்ரி அளித்த பேட்டியில் வனவிலங்குகளை காப்பாற்றும் எண்ணத்தில் நரேஷ் குப்தா உறுதியாக இருக்கிறார். அவர்கள் வனத்துறையினருக்கு தேர்தல் பணிகளில் இருந்து விலக்கு அளிப்பதாக உறுதி கூறியுள்ளார் என்றார் தத்தாத்ரி.












Click it and Unblock the Notifications