Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பணிந்தார் வைகோ-மதிமுகவுக்கு விருதுநகர், தஞ்சை, ஈரோடு, நீலகிரி

Subscribe to Oneindia Tamil

Vaiko
சென்னை: மதிமுகவுக்கு விருதுநகர், ஈரோடு, தஞ்சாவூர், நீலகிரி ஆகிய 4 தொகுதிகளை மட்டுமே ஒதுக்கியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா. இதை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஏற்றுக் கொண்டுவிட்டார்.

இது தொடர்பாக ஜெயலலிதாவை சந்தித்து உடன்பாட்டில் அவர் கையெழுத்திட்டார்.

அதிமுக கூட்டணியில், இதுவரை மதிமுகவுக்கான தொகுதிப் பங்கீடு மட்டும் முடியாமல் இருந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் தூதராக இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் சந்தித்துப் பேசிய பின்னர் மதிமுக கேட்ட விருதுநகர், தஞ்சாவூர், ஈரோடு, திருவள்ளூர் ஆகிய 4 தொகுதிகளை ஒதுக்க ஜெயலலிதா முன் வந்தார்.

ஆனால், திருவள்ளூர் தொகுதிக்குப் பதில் வேறு ஒரு தனித் தொகுதியை வைகோ கேட்டார். இதையடுத்து ஏற்கனவே கூறியபடி நீலகிரி தொகுதியை ஒதுக்கினார் ஜெயலலிதா. இது வைகோவுக்கு திருப்தி தராவிட்டாலும் ஏற்றுக் கொண்டுவிட்டார்.

முன்னதாக மத்திய சென்னையை மதிமுகவுக்கு ஜெயலலிதா ஒதுக்கினார். இதை வைகோ ஏற்க மறுத்து ஈரோடு தொகுதியைக் கேட்டார். நீண்ட யோசனைக்குப் பின் அதிமுக அந்தக் கோரிக்கையை ஏற்றது.

ஆனால், வைகோ கேட்ட 5வது தொகுதியான திருப்பூரையும் ஜெயலலிதா தரவில்லை. இதையும் வேறு வழியில்லாமல் வைகோ ஏற்றுக் கொண்டதால் தொகுதிப் பங்கீடு எட்டப்பட்டது.

இதைத் தொடர்ந்து இன்று காலை அதிமுக போட்டியிடும் தொகுதிகளையும், அதன் வேட்பாளர்களையும், மதிமுகவுக்கான தொகுதிளையும் ஜெயலலிதா அறிவித்தார்.

அதன்படி அதிமுக 23 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மதிமுகவுக்கு விருதுநகர், ஈரோடு, தஞ்சாவூர், நீலகிரி தனி ஆகியவை ஒதுக்கப்பட்டுள்ளன.

மதிமுக வேட்பாளர்கள் யார்?:

இதற்கிடையே விருதுநகரில் வைகோ, தஞ்சையில் ஜெயபாரதி விஸ்வநாதன், ஈரோட்டில் கணேச மூர்த்தி ஆகியோர் போட்டியிடலாம் என்று கூறப்படுகிறது. கடந்த தேர்தலைப் போல கடைசி நேரத்தில் சிவகாசியில் சிப்பிப்பாறை ரவிச்சந்திரனை நிறுத்திவிட்டு ஜகா வாங்கியதைப் போல இம்முறையும் வைகோ தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கவும் வாய்ப்புண்டு.

புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும்...

இந் நிலையில் இன்று மதிமுகவின் பொதுக் குழுக் கூட்டம் நடந்தது. சென்னை அண்ணா நகர் விஜயஸ்ரீமகாலில் நடந்த இக் கூட்டத்தில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம்:

தற்போது, மூன்றரை லட்சம் தமிழர்கள் முல்லைத் தீவில், மரண பயங்கரத்தில் சிக்கி உள்ளனர். நினைத்தாலே நெஞ்சம் நடுங்கும் பேரழிவு, ஈழத்தமிழ் மக்களை முற்றுகையிட்டுள்ளது. உடனடியாக இலங்கை அரசு தமிழர்கள் மீதான ராணுவத் தாக்குதலை நிறுத்தி, போர் நிறுத்தம் அறிவிக்க வேண்டும் என்று, இந்திய அரசு முழுமையான அரசியல் அழுத்தத்தைத் தந்து வற்புறுத்த வேண்டும் என்று இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

இலங்கைத் தீவில் தமிழ்த் தேசிய இனப்பிரச்சினைக்கு, சுதந்திர இறையாண்மையுள்ள தனித்தமிழ் ஈழ தேசம் மலர்வது ஒன்றுதான் நிரந்தரத் தீர்வு ஆகும் என்று, 1995ம் ஆண்டு, ஜூலை 1ம் தேதி, திருச்சியில் நடைபெற்ற ம.திமுக. மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேறியது. அந்தத் தீர்மானத்தையே இப்பொதுக் குழு மீண்டும் வலியுறுத்துவதோடு, தனித்தமிழ் ஈழம் மலர, தொடர்ந்து குரல் கொடுப்போம்.

இலங்கைத் தீவில், ஈழத்தமிழ் மக்களின் உரிமை வாழ்வுக்காக, மகத்தான தியாகங்களைச் செய்து யுத்த களத்தில் போராடி வருவதோடு, ஈழத்தமிழ் மக்களின் ஒட்டுமொத்த ஆதரவைப் பெற்று இருக்கின்ற தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை, இந்திய அரசு நீக்க வேண்டும்.

அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத் தலைமை யிலான கூட்டணியை, நாற்பது தொகுதிகளிலும் வெற்றி பெறச் செய்வதற்கு அரும்பணி ஆற்றுவது.

கொள்கை விளக்க அணிச்செயலாளர் நாஞ்சில் சம்பத்தை தேசப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்த கொடுமைக்கும், இதே அடக்குமுறைச் சட்டத்திற்கு ஆளாகியிருக்கின்ற பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, திரைப்பட இயக்குநர் சீமான் ஆகியோரின் கைதுக்கும் பலத்த கண்டனத்தை இப்பொதுக்குழு தெரிவிக்கிறது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+