பிரசாரம்:அதிமுக-பாமக கூட்டணியில் சலசலப்பு
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் பாமக வேட்பாளர் காடுவெட்டி குருவுக்கு ஆதரவாக நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அதிமுகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொள்ளவில்லை.
தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக 7 தொகுதிகளில் போட்டியிடுகிறது. திருவண்ணாமலையில் பாமக சார்பில் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், வன்னியர் சங்க தலைவருமான காடு வெட்டி குரு போட்டியிடுகிறார்.
இவர் தற்போது தொகுதியில் சுறுசுறுப்பாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். திருப்பத்தூர், ஜோலார்பேட்டை சட்டசபை தொகுதிகளில் பிரசராம் செய்தார். இந்நிலையில் அவருடன் பாமக நிர்வாகிகள் மட்டுமே பிரசாரம் செய்து வருவதாகவும், அதிமுகவினர் யாரும் அவருடன் பிரசாரத்துக்கு செல்வதில்லை என்றும் புகார் எழுந்தது.
இது குறித்து அதிமுக தரப்பில் விசாரித்த போது, பாமக வேட்பாளர் எங்கு செல்கிறார், எப்போது செல்கிறார் என்பது குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. அதனால் தான் எங்களால் அவர்களுடன் செல்ல முடியவில்லை என்றனர்.
பாமக தரப்பில் கேட்ட போது, அதிமுகவைத் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளுக்கு உரிய மரியைதை கொடுத்து பிரசாரத்திற்கு அழைத்துச் செல்கிறோம். திமுகவுக்கு வேண்டியவர்கள் யாரோ கிளப்பிவிட்ட வதந்தி தான் இது என்கின்றனர் பாமகவினர்.