அடுத்த பிரதமரை ஜெ. தேர்வு செய்வார்-வேட்பாளர்
ஆலங்குளம்: நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக வெற்றிபெறும். அடுத்த பிரதமர் யார் என்பதை அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா தேர்வு செய்வார் என நெல்லை அதிமுக வேட்பாளர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ஆலங்குளம் அருகேயுள்ள ஆலடிபட்டி வைத்திலிங்க சாமி கோவில் தேரோட்ட விழாவுக்கு நெல்லை நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் அண்ணாமலை வந்திருந்தார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
கட்சியில் நான் பட்ட கஷ்டம் கட்சி தலைமைக்கு தெரியும். அடிமட்ட தொண்டனுக்கு என்ன நடக்குது என்பது கூட அவருக்கு தெரியும். இது புரியாமல் சிலர் அவரை பற்றி தங்கள் இஷ்டப்படி பேசுகிறார்கள்.
அவை தலைவர் பதவி தந்தபோது கூட ஜெயலலிதா என்னிடம் நீங்க எவ்வளவு கஷ்டப்படுறீங்கன்னு எனக்கு தெரியும், கவலைப்படாம இருங்க என்றார்.
இன்று அவர் நம்பிக்கையுடன் எனக்கு சீட் தந்துள்ளார். அதிமுக நிச்சயம் ஜெயிக்கும். அடுத்த பிரதமரை ஜெயலலிதா தான் தேர்வு செய்வார். எல்லோரும் சேர்ந்து உழைப்போம். நெல்லையில் லட்சம் ஓட்டுக்கு மேல் அதிகம் பெற்று வெற்றி பெறுவேன்.
எம்எல்ஏவாக இருந்தபோதே நிறைய செய்திருக்கிறேன். எம்பி ஆனா இன்னும் நிறைய செய்யலாம். எனக்கு காசு முக்கியம் இல்லை. தொகுதி முழுவதும் உள்ள குறைகளை தெரிந்து கொண்டு அவைகளை நீக்குவேன் என்றார் அண்ணாமலை.