வேலூர் சிறையில் நளினி-முருகன் சந்திப்பு
வேலூர்: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட முருகன் நேற்று வேலூரில் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தனது மனைவி நளினியை சந்தித்துப் பேசினார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் முருகன், அவரது மனைவி நளினி, சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
இவர்களில் முருகனின் மனைவி நளினி வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மற்ற மூவரும் வேலூர் ஆண்கள் சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
முருகன், நளினி தம்பதியரின், குழந்தையின் நலனை கருத்தில் கொண்டு நளினிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
இந்நிலையில் முருகனும் அவரது மனைவி நளினியும் 15 நாட்களுக்கு ஒரு முறை சந்தித்து அரை மணி நேரம் பேசி கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி அவர்கள் நேற்று சந்தித்து கொண்டனர். இதற்காக முருகன் பலத்த பாதுகாப்புடன் வேலூர் பெண்கள் சிறைக்கு அழைத்து வரப்பட்டார். சந்திப்பு முடிந்ததும் முருகனை மீண்டும் சிறைக்கு போலீசார் அழைத்து சென்றனர்.