பாளை சிறையில் அதிரடி சோதனை-செல்போன் பறிமுதல்
நெல்லை: பாளை மத்திய சிறையில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட கைதியின் அறையிலிருந்து போலீசார் செல்போனை ஒன்றை கண்டுபிடித்து அதை பறிமுதல் செய்தனர்.
சிறைச்சாலைகள் மனித ஒழுக்கத்தை அதிகரிக்கவும், தவறு செய்தவர்கள் தங்களை உணர்ந்து திருந்தி புது வாழ்வு பெற வேண்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டவை. ஆனால், தமிழகத்தில் இருக்கும் சிறைச்சாலைகளில் கஞ்சா, சிகரெட் ஆகியவை சர்வசாதாரணமாக கிடைக்கிறது.
பாளையங்கோட்டை மத்திய சிறையும் இதற்கு விதிவிலக்கு அல்ல. செல்போன்கள், சிம்கார்டுகள், கஞ்சா ஆகிய இங்கு தங்கு தடையின்றி கிடைத்து வருவதாக தெரிகிறது.
இதையடுத்து சிறைச்சாலை அதிகாரிகள் அடிக்கடி கைதிகளை சோதனை போட்டு வந்தனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இந்த சோதனைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் நேற்று மீண்டும் அதிரடி சோதனையில் இறங்கினர். அப்போது வெளிச்சிறையில் 2ம் எண் அறையில் இருந்த உப்பு டப்பாவிலிருந்து செல்போன் ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், அதில் சிம்கார்டு எதுவும் இல்லை.
அந்த அறையில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதான ஆத்தூரை சேர்ந்த சங்கர் என்பவர் அடைக்கப்பட்டுள்ளார். இதிலிருந்த சிம்கார்டு கிடைத்தால் சம்பந்தப்பட்ட சங்கர் யார், யாரிடம் பேசியுள்ளார், ஏதேனும் சதி திட்டங்கள் உள்ளனவா, என்பது குறித்து தெரியவரும்.
இதையடுத்து சிறை அதிகாரிகள் பாளை, பெருமாள்புரம போலீசில் புகார் செய்தனர். செல்போன் போலீசாரிடம் ஓப்படைக்கப்பட்டது. அவர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.