'பஞ்சி ஜம்ப்'-சென்னை மெரைன் என்ஜீனியர் பெங்களூரில் பலி
சென்னை அண்ணாநகர் வசந்தம் காலனி ஐந்தாவது தெருவை சேர்ந்தவர் வெங்கட்ராமன். இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களது மூத்த மகன் பார்கவ் (23) மரைன் என்ஜினியரிங் படித்துவிட்டு சென்னையில் மெரைன் என்ஜீனியராக வேலை பார்த்து வந்தார். இரண்டாவது மகன் சரண் (21) கல்லூரியில் படித்து வருகிறார்.
பார்கவ் சாகச விளையாட்டுகளில் ஈடுபடுவதில் அலாதி பிரியம். அதுவும் 'பஞ்சி ஜம்ப்' விளையாடி பார்க்க மிகவும் ஆசைப்பட்டுள்ளார்.
இந்தியாவில் 'பஞ்சி ஜம்ப்' எங்கு நடக்கிறது என்பதை தேட துவங்கியுள்ளார். அப்போது அவருக்கு இன்டர்நெட் நண்பர்கள் சிலர் மூலமாக பெங்களூரில் பன்னர்கட்டா பகுதியில் உள்ள பொழுதுபோக்கு பூங்கா ஒன்றில் 'பஞ்சி ஜம்ப்' நடப்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து தனது நண்பர்கள் 15 பேருடன் சேர்ந்து கடந்த 10ம் தேதி இரவு சென்னையி்ல இருந்து பெங்களூர் வந்தார். அவர்கள் பெங்களூர் முருகேசபாளையத்தி்ல் இருக்கும் கிளப் ஒன்றிலிருந்து ரூ. 750க்கு டிக்கெட் வாங்கி கொண்டு பன்னர்கட்டா வந்தனர்.
பஞ்சி ஜம்ப் விளையாட்டில் முதலில் பெல்ட் அணிந்து கொண்டு உயரமான இடத்தில் இருந்து கீழே குதிப்பார்கள். பின்னர் கீழே இருந்து மெல்ல மேலே கிரேன் மூலம் தூக்கப்படுவார்கள்.
200 அடி உயரத்தில் இருந்து கீழே பள்ளத்தில் குதிக்கும் விளையாட்டின் முதல் பாதியை பார்கவ் மற்றும் அவரது நண்பர்கள் வெற்றிகரமாக முடித்தார்கள்.
பின்னர் அடுத்த கட்டமான பள்ளத்தில் இருந்து மேலே செல்லும் விளையாட்டு ஆரம்பமானது. இதற்காக பார்கவ், இடுப்பிலும், கால்களிலும் பாதுகாப்பு பெல்ட்டுகளை கட்டிக்கொண்டு தயாரானார். அவருக்கு இந்த பாதுகாப்பு பெல்டை அங்கு வேலை பார்த்த பிரனேஷ், நாகேந்திரா ஆகியோர் கட்டியுள்ளனர்.
பார்கவ் உற்சாகத்துடன் மேலே ஏறிக் கொண்டிருந்தார். அவர் 60 அடி உயரத்தில் சென்று கொண்டிருந்த போது திடீரென இடுப்பு பெல்ட் அறுந்தது. இதையடுத்து அவர் அங்கிருந்து கீழே விழுந்தார். கீழே விழுபவர்களுக்கு அடிபடாமல் இருக்க வலை பின்னப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
என்றாலும் பார்கவ், அந்த பாதுகாப்பு வலையை தாண்டி போய் விழுந்து விட்டார். பலத்த அடிபட்டு அவருக்கு தலையில் ரத்தம் கொட்டியது. அவரை உடனடியாக மருத்துவமனைக்கு தூக்கி சென்றனார். ஆனால், அவர் இறந்து வெகு நேரமாகிவிட்டது என டாக்டர்கள் கைவிரித்துவிட்டனர்.
நேற்று பெங்களூர் விக்டோரியா அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 'பஞ்சி ஜம்ப்' விளையாட அந்த பொழுதுபோக்கு பூங்காவினர் முறைப்படி அனுமதி வாங்கவில்லை என்பது விசாரணையில் தெரிய வந்தது.
மேலும், பார்கவுக்கு கட்டப்பட்ட இடுப்பு பெல்ட் பழுதடைந்திருந்ததும் தெரிய வந்தது..
இதையடுத்து கேர் அட்வென்ச்சர் கிளப்பின் நிர்வாகியான சேஷாத்ரி, பஞ்சி ஜம்ப் விளையாட்டின் குழு தலைவரான சச்சின் ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ளனர்.