திருவள்ளூர்-2வது முறையாக வேட்பாளரை மாற்றிய ஜெ: விழுப்புரத்துக்கும் புது வேட்பாளர்
திருவள்ளூர் (தனி) தொகுதி வேட்பாளராக முன்பு ராஜன் அறிவிக்கப்பட்டிருந்தார். அவர் கிறிஸ்த தலித் என்பதால் போட்டியிட்டால் சிக்கல் வரும் என்பதால் நேற்று முன்தினம் அவர் மாற்றப்பட்டார்.
இந் நிலையில் ராஜனுக்குப் பதில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் இன்பராஜையும் மாற்றி விட்டார் ஜெயலலிதா. அவருக்குப் பதில் டாக்டர் வேணுகோபால் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இன்பராஜும் தலித் கிறிஸ்தவர் எனக் கூறப்படுகிறது. இதையடுத்து அவரையும் ஜெயலலிதா மாற்றலாம் என நேற்றே தட்ஸ்தமிழ் சொன்னது.
இந் நிலையில் இன்பராஜை மாற்றிவிட்டு மீண்டும் ஒரு புதிய வேட்பாளரை அறிவித்துள்ளார் ஜெயலலிதா.
விழுப்புரத்திற்கு ஆனந்தன்..
இதேபோல விழுப்புரம் தனி தொகுதி வேட்பாளராக அறிவிக்கபப்ட்ட முருகன் மாற்றப்பட்டு அவருக்குப் பதில் ஆனந்தன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இவரை மாற்றியதற்குக் காரணம் முருகன் மீது வந்து குவிந்த புகார் மலை தானாம்.
அதே போல ஆரணி தொகுதி வேட்பாளர் மீதும் அதிருப்தி நிலவுவதால் அதிமுகவின் இந்த வேட்பாளர் மாற்றங்கள் இன்னும் தொடரும் என்றே தெரிகிறது.
முன்னதாக பெரம்பலூரில் திமுக சார்பில் நிற்கும் வலுவான நடிகர் நெப்போலியனை எதிர்த்துப் போட்டியிடும் வகையில் பெரம்பலூர் தொகுதி வேட்பாளர் மருதை ராஜையும் ஜெயலலிதா மாற்றினார். இவர் திமுகவினருடன் மிக நெருக்கமாக இருப்பதால் மாற்றப்பட்டார்.
இந் நிலையில் வேட்பாளர் மாற்றம் குறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிதாக கிடைத்த சில தகவல்களின் அடிப்படையில் தவிர்க்க முடியாத காரணங்களினால் அதிமுக ஆட்சி மன்றக் குழு மறுபரிசீலனை செய்து வேட்பாளர்களை மாற்றியுள்ளதாகக் கூறியுள்ளார்.