இவர்களா காமராஜர் ஆட்சி அமைப்பார்கள்?-விஜயகாந்த்
விருதுநகர்: கருமவீரர் காமராஜரின் மணி மண்டபத்தைக் கூட பராமரிக்க முடியாத காங்கிரசார் காமராஜர் ஆட்சி அமைப்பதாக கூறுவது ஏமாற்று வேலை என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் விருதுநகர் தொகுதியில் தனது கட்சி வேட்பாளர் பாண்டியராஜனை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார். விருதுநகருக்கு அருகில் இருக்கும் ஆர்ஆர் நகர், சூலக்கரை, அல்லம்பட்டி உள்ளிட்ட இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில்,
காமராஜர் மணிமண்டபத்துக்கு மின் கட்டணம் கூட கட்ட முடியாமல் அங்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. அவரது நினைவாக உள்ள மணி மண்டபத்தைக் கூட பராமரிக்காத காங்கிரசார், அடுத்து காமராஜர் ஆட்சி அமைப்போம் எனக் கூறி மக்களை ஏமாற்றி வருகின்றனர்.
விருதுநகர் தொகுதியில் படித்த, படிக்காத இளைஞர்கள் ஏராளமானோர் வேலை வாய்ப்பின்றி உள்ளனர். ஐந்து லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை பெற்றுத் தருவோம் என்றவர்கள் சொன்னதைச் செய்யவில்லை. நான் ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு தருவதாகக் கூறி, இதுவரை 26 ஆயிரம் பேருக்கு வேலை பெற்றுத் தந்துள்ளேன்.
காமராஜர் நினைவாக உள்ள மணி மண்டபத்தைக் கூட சரிவர பராமரிக்க முடியாதவர்களால் எப்படி காமராஜர் ஆட்சியைக் கொண்டு வர முடியும். 50 ஆண்டுகளாக தமிழகத்தில் கட்சி நடத்துகிறவர்களுக்கு தனித்துப் போட்டியிட துணிவு கிடையாது.
தண்ணீருக்காக 3 மாநிலங்களை நம்பியுள்ளோம். மத்திய அரசில் பங்கு வகிப்பவர்கள், தண்ணீர் கொண்டு வர ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. பெண்கள் நினைத்தால் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தலாம். தேமுதிகவுக்கு வாய்ப்பளித்தால் கல்வி, விவசாயம் மேம்படுத்தப்படும். சமச்சீர் கல்வி அமல்படுத்தப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications