மன்மோகனை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்-வைகோ
விருதுநகர்: இலங்கை தமிழர்களை கொல்ல ஆயுதம் வழங்கி உதவி வரும் பிரதமர் மன்மோகன் சிங், முதல்வர் கருணாநிதி ஆகியோரை இந்த தேர்தலில் மக்கள் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் வைகோ 10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தேர்தலில் போட்டியிடுகிறார். இரண்டு முறை சிவகாசி நாடாளுமன்ற தொகுதியில் இருந்து வெற்றி பெற்றுள்ள இவர் இம்முறை மறுசீரமைப்புக்கு பின்னர் புதிததாக உருவாக்கப்ப்டடுள்ள விருதுநகர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
இதையடுத்து விருதுநகர் மாவட்ட மதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. அதில் வைகோ பேசுகையில்,
இலங்கை தமிழர்களை காவு கொடுக்க ஆயுதம் தந்த பிரதமர் மன்மோகன் சிங், முதல்வர் கருணாநிதி ஆகியோரை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். நான் பிரிவினைவாதம் பேசுகிறேன் என்கிறார்கள். கருணாநிதி இலங்கை தமிழர்களுக்கு ஏதாவது ஒன்று என்றால் பூகம்பம் வெடிக்கும் என்றார். பூகம்பம் வெடித்தால் எத்தனை பேர் சாவார்கள். அது பிரிவினைவாதம் இல்லையா?
இலங்கை தமிழர்களுக்காக தமிழகத்தில் 13 பேர் தீக்குளித்தார்கள். அதுபோலத்தான் பிரபாகரன் கைது செய்யப்பட்டால் இங்கு உள்ள இளைஞர்கள் தீக்குளித்து ரத்த ஆறு ஓடும் என்றேன். இதனை பிரிவினைவாதம் பேசுவதாகவும், இந்திய இறையாண்மை எதிராக பேசுவதாக கூறி என் மீது வழக்கு போட்டார்கள். இந்த வழக்குகளுக்கு எல்லாம் நான் பயந்துவிட மாட்டேன்.
கட்சியின் கட்டளையின்படி போட்டி...
நான் விருதுநகர் தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுவது குறித்து கட்சி நிர்வாகக் குழு உறுப்பினர்களிடம் பேசினேன். அதனை வெளியில் சொல்ல முடியாது. கட்சி கட்டளையிட்டபடி இந்தத் தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுகிறேன். நான் போட்டியிடாவிட்டாலும் தொண்டர்கள் கோபம் அடைவார்கள்.
நான் சிவகாசியில் எம்பியாக இருந்தபோது என் அலுவலக கதவு திறந்தே இருந்தது. கட்சி பாகுபாடு இன்றி 8,000க்கும் மேற்பட்ட ஏழை ஊனமுற்ற குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்துள்ளேன்.
65,000 குழந்தைகளுக்கு 3 முறை மஞ்சள் காமாலை தடுப்பூசி முகாம் நடத்தியுள்ளேன். பல ரயில் திட்டங்களை கொண்டு வந்துள்ளேன். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்று தந்துள்ளேன்.
தேர்தலில் ஓட்டுக்கு காசு கொடுக்கும் கலாச்சாரத்தை உருவாக்கி உள்ளனர். அதைத் தாண்டி நாம் வெற்றி பெற வேண்டும். தோழமை கட்சியினர்களை முன்னிறுத்தி வாக்குகள் கேட்க வேண்டும். அப்போது தான் நாம் வெற்றி பெற முடியும் என்றார் வைகோ.












Click it and Unblock the Notifications