மதவாதிகள்: சோனியா மன்னிப்பு கேட்கனும்-அத்வானி
திருவனந்தபுரம்: இந்தியாவின் பாதுகாப்புக்கு வெளிநாட்டில் இருந்து வரும் தீவிரவாதிகளை விட உள்நாட்டிலேயே உள்ள மதவாதிகளால் தான் அதிக ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளதற்கு பாஜக தலைவர் அத்வானி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாஜக மீது அவதூறான குற்றச்சாட்டை கூறிய சோனியா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
ஜார்கண்ட் மாநிலத்தில் பிரசாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, இந்தியாவின் பாதுகாப்புக்கு வெளிநாட்டில் இருந்து வரும் தீவிரவாதிகளை விட உள்நாட்டிலேயே உள்ள மதவாதிகளால் தான் அதிக ஆபத்து உருவாகியுள்ளது என்று கூறியிருந்தார்.
இந் நிலையில் திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் பேசிய அத்வானி,
பாஜக பெயரை குறிப்பிடாமல் சோனியா பேசிய போதிலும், அவர் எங்களைத்தான் குறிப்பிட்டே அந்தக் கருத்துகளை கூறியுள்ளார்.
1962 மற்றும் 1965ம் ஆண்டுகளில் நடந்த போர்களின் போது ஜனசங்கமும், ஆர்எஸ்எஸ் இயக்குமும் ஆற்றிய பணிகளை அப்போதைய பிரதமர்கள் ஜவஹர்லால் நேரு மற்றும் லால் பகதூர் சாஸ்திரி ஆகியோர் பாராட்டியுள்ளனர்.
மேலும் 1963ம் ஆண்டு நடந்து குடியரசு தின விழா அணிவகுப்பில் ஆர்எஸ்எஸ் தொண்டர்களும் பங்கேற்க சிறப்பு அனுமதியை வழங்கினார் நேரு. சொந்த கட்சியில் நடந்த இது போன்ற வரலாற்று நிகழ்வுகளை சோனியா அறிந்து கொள்ளவில்லை. எனவே தான் இப்படிப் பேசுகிறார்.
அதற்காக சோனியா மன்னிப்பு கேட்க வேண்டும். அல்லது அல்-கொய்தா, மும்பை தாக்குதல் ஆகியவை குறித்து என்னுடன் நேருக்கு நேர் விவாதம் நடத்த முன் வர வேண்டும்.
நாட்டின் அரசியல் சூழ்நிலையை கணிக்கும் யாருமே பாஜக, காங்கிரஸ் அல்லாத அரசு அமையும் என்று கூறவில்லை. மூன்றாவது அணியோ, நான்காவது அணியோ யாராக இருந்தாலும் சொந்தமாக ஆட்சி அமைக்க முடியாது. அவை சந்தர்ப்பவாத கூட்டணிகள்.
மார்க்சிஸ்ட் கட்சி, தன்னை வளர்த்துக் கொள்ளவே மூன்றாவது அணியை உருவாக்கியிருக்கிறது.
காங்கிரசுடன் கூட்டணி வைத்திருந்த கட்சிகள் விலகிச் சென்றுவிட்டன. ஏனெனில், காங்கிரஸ் கட்சி நம்பத்தகுந்தது அல்ல என்று அந்தக் கட்சிகள் கருதுகின்றன.
பிரதமர் பதவியின் மரியாதையையே நீர்த்து போகச் செய்தவர் மன்மோகன் சிங். அவர் ஒரு மிக பலவீனமான பிரதமர், சோனியாவின் கட்டளைக்கு ஏற்பவே செயல்படும் பொம்மை.
தேர்தலுக்குப் பின்கு பாஜக ஆட்சியமைக்க அதிமுக ஆதரவு தரும் என சாதாரணமாகவே தெரிவித்தேன். அதைத் தீர்மானிக்க வேண்டியது ஜெயலலிதா தான் (ஜெயலிலதாவுடன் பேச்சு நடத்தி வருவதாக அத்வானி கூறியதை நேற்று அவர் மறுத்தார். இதையடுத்து அத்வானி இவ்வாறு கூறியுள்ளார்.).
தேர்தலுக்கு பிறகு பாஜகவை பல்வேறு கட்சிகள் ஆதரிக்கும் என்றார்.












Click it and Unblock the Notifications