குஜராத் கலவரம்: மாஜி டிஜிபி நிரபராதி-புலனாய்வு பிரிவு
டெல்லி: குஜராத்தில் முஸ்லீம்களுக்கு எதிரான கலவரத்தில் முன்னாள் டிஜிபி பி.சி.பாண்டேவுக்குத் தொடர்பு இல்லை என்று உச்சநீதிமன்றம் நியமித்த சிறப்பு புலனாய்வுப் பிரிவுதெரிவித்துள்ளது.
2002ம் ஆண்டு குஜராத்தில் பெரும் மதக் கலவரம் மூண்டது. முஸ்லீம் சமுதாயத்தினர் விரட்டி விரட்டி கொலை செய்யப்பட்டனர். அவர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. அப்போது அகமதாபாத் நகர கமிஷனராக இருந்தார் பாண்டே.
கலவரத்திற்கு அவர் துணை போனதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் இதுகுறித்து உச்சநீதிமன்றம் நியமித்த சிறப்பு புலனாய்வுப் படை தனது அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
அதில் பி.சி.பாண்டேவுக்கு கலவரத்தில் தொடர்பு கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து புலனாய்வுக் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது..
குல்பர்க்கில் நடந்த சம்பவத்தின்போது (இந்த வன்முறையில் முன்னாள் காங்கிரஸ் எம்.பி. சப்ரி மற்றும் அவரது குடும்பத்தினர் சங் பரிவார் கும்பலால் உயிருடன் தீவைத்துக் கொளுத்தப்பட்டனர்) பி.சி.பாண்டே மருத்துவமனையில் இருந்தார். கலவரத்தில் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்தவர்களுக்கு ஆறுதல் கூறிக் கொண்டிருந்தார். காயமடைந்தவர்களுக்கு அவர் உதவிக் கொண்டிருந்தார்.
பி.சி.பாண்டேவுக்கு எதிராக தன்னார்வ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த தீஸ்தா தலைமையிலானவர்கள் சமர்ப்பித்த புகார்கள் அனைத்தும் தவறானவை. உள்நோக்கம் கொண்டவை என்று கூறப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையை பெற்றுக் கொண்ட சுப்ரீம் கோர்ட் நீதிபதி அரிஜித் பசாயத், குஜராத் கலவரம் தொடர்பாக 10 முக்கிய வழக்குகள் (குல்பர்க், நரோடா பாதியா, சர்தார் புரா உள்பட) உள்பட அனைத்து வழக்குகளையும் விசாரிக்க தேவையான அளவு தனி கோர்ட்டுகளை குஜராத் அரசு நியமிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
மேலும் குஜராத் கலவரம் தொடர்பாக சிபிஐ விசாரணை தேவையில்லை என்று தெரிவித்த நீதிபதி, இந்த வழக்குகளை குஜராத்திலிருந்து வெளிமாநிலத்திற்கு மாற்றுவது தொடர்பான கோரிக்கை குறித்து குஜராத் அரசு விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications