அழகிரிக்கு எதிராக சிபிஎம் 'சிடி' வெளியீடு!
மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. இதில் செல்வ சிங், லாசர், நன்மாறன் எம்எல்ஏ, மாவட்டச் செயலாளர்கள் அண்ணாதுரை, சுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
மேலூர் பகுதியில் உள்ள அ. வல்லாளப்பட்டி பேரூராட்சியில் அழகிரி கடந்த 10 ம் தேதி பிரச்சாரம் செய்தார். அப்போது, அவருக்கு ஆரத்தி எடுத்த பெண்களுக்கு திமுக ஒன்றிய செயலாளர் ரகுபதி டோக்கன் கொடுத்தார்.
அழகிரி சென்ற பின்னர், திமுக கிளைச் செயலாளர் மோகன் அந்த டோக்கனை பெற்றுக் கொணட்டு தலா ரூ. 100 கொடுத்துள்ளார். இதை நாங்கள் கேமராவில் பதிவு செய்து சிடியாக தயாரித்துள்ளோம். எங்களிடம் ஆதாரமாக அந்த சிடி உள்ளது.
கடந்த 8ம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை உள்ளூர் தொலைக் காட்சி ஒன்று நேரலை செய்தது.
அப்போது, மதுரையில் திமுக வேட்பாளர் அழகிரிக்கு வாக்களியுங்கள் என்ற பிரசார விளம்பரம் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதையும் சிடியில் பதிவு செய்துள்ளோம்.
இதுவரை மதுரையில் செய்யப்படும் தேர்தல் விதிமுறைகள் மீறல் தொடர்பாக 10க்கும் மேற்பட்ட புகார்களை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தாவிடமும், மாவட்ட கலெக்டரிடமும் கொடுத்துள்ளோம். ஆனால் இதுவரை போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றனர்.