ராகுலுக்கு பிரியங்கா குழந்தைகள் ஓட்டு வேட்டை!
உ.பி. மாநிலம் அமேதியில் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். அவருக்காக அங்கு பிரியங்கா காந்தி முகாமிட்டு ஓட்டு வேட்டையாடுகிறார்.
அவருடன் நேற்று பிரியங்காவின் பிள்ளைகளான ரைஹான் மற்றும் மிரயா ஆகியோரும் ராகுல் மாமாவுக்கு வாக்கு சேகரிக்க அம்மாவுடன் கிளம்பி விட்டனர்.
பிரியங்காவுடன் சென்ற அவர்கள் வழியெங்கும் திரண்டிருந்த வாக்காளர்களைப் பார்த்து அவர்கள் காலில் போய் விழுந்து கும்பிட்டு வணங்கி, மாமாவுக்கு ஓட்டுப் போடுங்க என்று கேட்டுக் கொண்டனர்.
தங்களது அம்மா பிரியங்கா பெரியவர்களின் காலில் விழுந்து வணங்கி வாக்கு கேட்பதைப் பார்த்த இவர்கள், அதே பாணியில் எதிரில் யாராவது பெரியவர்களைப் பார்த்தால் காலில் விழுந்து வணங்கி மாமாவுக்கு ஓட்டுப் போடுங்க என்று கேட்கின்றனர்.
தங்களது மாமா ராகுலைப் போலவே வெள்ளை பைஜாமா, குர்தாவுடன் கலக்கலாக இவர்கள் ஓட்டு வேட்டையாடுவதைப் பார்த்து அமேதி தொகுதியே அதிசயித்துக் கிடக்கிறது.
கடந்த 3 நாட்களாக இந்த சுட்டிகள் இருவரும் கெஸ்ட் ஹவுஸில் பலத்த பாதுகாப்புடன்தான் இருந்தனர். ஆனால் தற்போது இவர்களும் பிரசாரக் களத்தில் குதித்து விட்டனர்.
சகோதரருக்காக அமேதியில் ஓட்டு வேட்டையாடும் பிரியங்கா, அருகில் உள்ள ரேபரேலியில் போட்டியிடும் சோனியாவுக்காகவும் பிரசாரம் செய்து வருகிறார். இரு தொகுதிகளையும் தனது பொறுப்பில் எடுத்துக் கொண்டுள்ள பிரியங்கா இரு தொகுதிகளுக்கும் மாறி மாறிப் போய் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.