தேர்தல் விதி மீறல் - லாலு கைதாகி விடுதலை
ராஞ்சி: தேர்தல் விதிமீறல் தொடர்பாக ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் நேற்று திடீரென கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
கடந்த 7-ந் தேதி லாலு பிரசாத் ஜார்க்கண்ட் மாநிலம் கார்வா என்ற நகரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
அவரது பிரசாரத்துக்காக அங்குள்ள கல்லூரி மைதானத்தில் பொதுக்கூட்ட மேடை அமைக்கப்பட்டு இருந்தது. அந்த கல்லூரியில் இருந்து 3 கி.மீ. தூரத்தில் அவர் வந்த ஹெலிகாப்டர் இறங்க தளம் (ஹெலிபேட்) அமைக்கப்பட்டு இருந்தது. ஆனால் அங்கு இறங்காமல், நேரடியாக மைதானத்திற்கே ஹெலிகாப்டரை கொண்டு வந்து இறக்கினர்.
இந்த சம்பவம் தேர்தல் நடத்தை விதியை மீறியது என்று கூறி கார்வா மாவட்ட நிர்வாகம் லாலு பிரசாத் மற்றும் பைலட் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்தது. பைலட் கைது செய்யப்பட்டு, உடனடியாக ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக லாலுவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்த நிலையில் லாலு பிரசாத் நேற்று கார்வா நகரில் நடந்த ஒரு தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது போலீசார் அங்கு சென்று அவரை கைது செய்தனர். பின்னர் அவர் உடனடியாக ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
ஹெலிகாப்டரை மைதானத்தில் இறக்கிய வழக்கிலேயே லாலு கைது செய்யப்பட்டதாக எஸ்.பி. சாகேத்குமார் சிங் கூறியுள்ளார்.
பின்னர் நடந்த கூட்டத்தில் லாலு பேசுகையில்,
வருண் காந்தி நாட்டில் துவேஷத்தை பரப்பி வருகிறார். சாதி, மதத்துக்கு எதிராக தொடர்ந்து போராடுவேன். அதற்காக என் உயிரே போனாலும் கவலைப்பட மாட்டேன். நான் கைது செய்யப்பட்டதற்காக கவலைப்படவில்லை.
நாட்டில் மதசார்பின்மையை காப்பாற்ற என் உயிரையும் தியாகம் செய்யத் தயாராக இருக்கிறேன். என்னைப் போன்ற மகாத்மா காந்தியின் தொண்டர்கள் சாதி, மத துரோகிகளை நிச்சயம் வெற்றி கொள்வோம்.
பிரதமர் வேட்பாளர் அத்வானி, சிவசேனா தலைவர் பால் தாக்கரே, விசுவ இந்து பரிட்சத் தலைவர் பிரவீன் தொகாடியா ஆகியோர் காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சேவால் ஈர்க்கப்பட்டதாக சொல்கிறார்கள். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
தேர்தல் முடிந்ததும் ராஷ்டிரீய ஜனதா தளம், லோக் ஜனசக்தி, சமாஜ்வாடி கட்சி ஆகியவை புதிய அரசாங்கம் அமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும்.
அடுத்த பிரதமராக வட இந்தியாவைச் சேர்ந்தவர்தான் வருவார். பிஜூ ஜனதா தளம் கட்சி தலைவர் நவீன் பட்நாயக், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் சில தலைவர்கள் மே 16-ந் தேதிக்குப் பிறகு, மத்தியில் மதசார்பற்ற அரசு அமைக்க எங்களுடன் சேர்வார்கள் என்றார் லாலு.